தண்ணீர் இல்லாத கழிவறையை அறிமுகப்படுத்திய பில்கேட்ஸ்
பில்கேட்ஸ், உலகம் முழுவதும் சுகாதாரமாக இருப்பது என்பது கட்டாயமான ஒன்று என அடிக்கடி கூறுவார். சமீபத்தில் ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் தொண்டு நிறுவனம், தூய்மை இந்தியா திட்டத்திற்காக குளோபல் கோல்கீப்பர் என்ற விருதை மோடிக்கு வழங்கியது.
பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் தொண்டு நிறுவன அறிக்கையின் படி, இந்தியாவின் கிராமப்புறங்களில் மேம்பட்ட சுகாதார வசதிகள், குழந்தைகளின் இதய பிரச்சினைகள் சரிவு, பெண்களின் பி.எம்.ஐ உயர்வு ஆகியவை நிகழ்ந்துள்ளது தெரியவருகிறது.
இந்த நிலையில் பில்கேட்ஸ் சீனாவில் புதிய வகை கழிவறை மாடல் ஒன்றை அறிமுகப்படுத்தினார். அந்த நிகழ்ச்சியின் உரையில் பேசிய பில்கேட்ஸ், உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ தேவையான பாதுகாப்பான சுகாதாரம் இல்லை என கூறினார்.
பொதுவான கழிப்பறைக்கு தண்ணீர் தேவை. ஆனால் இந்த புதிய அணுகுமுறைகளுக்கு தண்ணீர் தேவையில்லை எனவும் சில நேரங்களில் மின்சாரமும் தேவையில்லை எனவும் சூரிய சக்தியில் இயங்கும் எனவும் கூறினார். இந்த கழிவறைகள் மாடல் கழிவுகளிலிருந்து நோய்க்கிருமிகளை அகற்றும் வகையிலான அமைப்புகள் இணைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.