‘மு’ (Mu) என அழைக்கப்படுகிற புதிய உருமாறிய கொரோனா வைரஸ் தடுப்பூசிகளுக்கு தப்பி விடுகிற அறிகுறிகள் தென்படுவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
இதையடுத்து, இந்தியாவில் ‘மு’ பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் முடங்கியுள்ளது.
சீனாவின் உகான் நகரில் 2019-ம் ஆண்டு இறுதியில் உருவாகி பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல லட்சம் மக்களின் உயிரைப் பறித்துள்ளது. இதை தடுக்க தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்குச் செலுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் இந்த வைரஸ் தொடர்ந்து உருமாறி வருகிறது. அதன் உருமாறிய ஒரு வடிவம் பி.1.621 ஆகும். இது ‘மு’ என அழைக்கப்படுகிறது.
இது கடந்த ஜனவரி மாதம் தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் முதன்முதலாக காணப்பட்டது. அதன்பின்னர் ஆங்காங்கே இந்த வைரஸ் காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அதே நேரத்தில் தென் அமெரிக்காவிலும், ஐரோப்பியாவிலும் குறிப்பிட்ட பகுதிகளில் பெரிய அளவில் வெளிப்பட்டுள்ளது.
மேலும், ‘மு’ வைரஸ், இங்கிலாந்து, அமெரிக்கா, சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கிலும் பாதித்துள்ளது. இந்த வைரசை உன்னிப்பாக கவனித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளது.
இது உலகளாவிய பாதிப்பைக் கொண்டிருந்தாலும்கூட தற்போது இதன் பரவல் விகிதம் 0.1 சதவீதத்துக்கு குறைவாகவே இருப்பதாக தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில் கொலம்பியாவில் 39 சதவீதமும், ஈக்குவடாரில் 13 சதவீதமும் உள்ளது. தொடர்ந்து அதிகரித்தும் வருகிறது கவலைக்குரிய விஷயமாகும்.
இது உலக சுகாதார அமைப்பின் கண்காணிப்பு பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது. 39 நாடுகளில் காணப்படுகிறது. இது நோய் எதிர்ப்புக்கு தப்பிக்கும் சாத்தியமான பண்புகளைக் கொண்டிருப்பதை, தடுப்பூசிக்கு தப்பி விடும் அறிகுறிகளாக உலக சுகாதார அமைப்பு கண்டு எச்சரித்துள்ளது. இந்த வைரஸ், உலக சுகாதார அமைப்பினால் கண்காணிக்கப்படுகிற 5-வது உருமாறிய வைரஸ் ஆகும்.
இந்த புதிய உருமாறிய வைரசானது, தடுப்பூசிக்கு தப்பிவிடும் அறிகுறிகளை கொண்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறினாலும், இதை உறுதி செய்ய மேலும் ஆராய்ச்சிகள் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளது.
ஏற்கனவே தென் ஆப்பிரிக்காவில் சி.1.2 என்ற புதிய உருமாறிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
கடந்த மே மாதம் தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய சி.1.2 வகை வைரஸ் அதிவேகமாகப் பரவ வாய்ப்புள்ளதாக அந்நாட்டின் தேசிய தொற்றுநோய் நிறுவனம் (என்ஐசிடி) மற்றும் குவாசூலு-நடால் ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.