ஒலிம்பிக் என்றாலே எப்போதும் நினைவுக்கு வரும் நாடுகளுள் ஒன்றாக ரஷ்யா உள்ளது. ஆனால், தற்போது டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யா பங்கேற்றுள்ளதா என்று பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது.
ஏனெனில், ஐ.ஓ.சி அகதிகள் ஒலிம்பிக் குழு உட்பட 206 தேசிய ஒலிம்பிக் குழுக்கள் இடம்பெற்றுள்ள ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா தொடங்கி தற்போது வரை போட்டிகள் எதிலும் ரஷ்யா என்ற பெயரை நாம் பார்க்க முடியவில்லை.
இதற்கு காரணம் டோக்கியோ ஒலிம்பிக்கில் ரஷ்யா பங்கேற்கவில்லை, ஆனால், ரஷ்ய வீரர்கள் பங்கேற்றுள்ளனர்…
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான பதக்க பட்டியலில் ROC என்ற பெயர் இடம்பெற்றுள்ளது. அது வேறு யாருமல்ல நம்ம ரஷ்யா தான்.
ஆம், ரஷ்யா என்னும் நாடு இந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவில்லை. ஆனால், அந்நாட்டின் வீரர்கள் ROC அதாவது ரஷ்யா ஒலிம்பிக் கமிட்டி என்ற பெயரில் அவர்கள் போட்டியில் பங்கேற்றுள்ளனர்.
உலகளவில், தலைச்சிறந்த விளையாட்டு வீரர்களை கொண்டுள்ள ரஷ்யா, ஊக்க மருந்து பரிசோதனையில் சிக்குவது வழக்கம்.
கடந்த 2016ம் ஆண்டு பிரேசிலின் ரியோ நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 19 தங்கம் உட்பட 56 பதக்கங்களை வென்று 4வது இடத்தை பிடித்தது ரஷ்யா.
ரஷ்யா மீது ஊக்கமருந்து விவகாரத்தில் தொடர்ந்து பல்வேறு புகார்கள் குவிந்தன. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டதில், புகார்கள் உண்மை என்பது தெரியவந்தது.
மேலும், இந்த விதிமீறல்களுக்கு ரஷ்ய அரசே உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. 2011 முதல் 2015 வரை 1,000 க்கும் மேற்பட்ட ரஷ்ய விளையாட்டு வீரர்கள் அரசால் வழங்கப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் 2022ம் ஆண்டு வரை நான்கு ஆண்டுகளுக்கு சர்வதேச விளையாட்டு போட்டிகளில் ரஷ்யா பங்கேற்க சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு ஆணையமான WADA கடந்த 2019ம் ஆண்டு தடை விதித்தது.
ஊக்க மருந்து விவகாரத்தில் விதிகளை மீறியதாக இதுவரை ரஷ்யாவிடமிருந்து இதுவரை 44 பதக்கங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன, வேறு எந்த நாடும் இந்த அளவுக்கு மோசமான நடவடிக்கைக்கு சிக்கியதில்லை.
பின்னர் ரஷ்யாவின் மேல்முறையீட்டை தொடர்ந்து தடை 2 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.
சர்வதேச போட்டிகளில் ரஷ்யா பங்கேற்கலாம் ஆனால் நாட்டின் பெயர், தேசிய கொடி, தேசிய கீதம் ஆகியவற்றை ரஷ்யா பயன்படுத்த முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதன் காரணமாகவே, டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் Russian Olympic Committee (ROC) என்ற பெயரில் 335 ரஷ்ய வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
பொதுவாக ஒரு வீரர் பதக்கம் பெறுகையில் அந்த வீரருடைய நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்படும். ஆனால் ரஷ்ய வீரர் யாராவது தங்கப் பதக்கம் வென்று போடியத்தில் நிற்கும் போது ரஷ்ய தேசிய கீதம் இசைக்கப்படாது.
அதற்கு பதிலாக, பியாதர் சாய்கோவ்ஸ்கி என்பவர் இசையமைத்த பியானோ கான்சர்டோ இசைக்குறிப்பு ஒலிக்கப்படும்.
எங்கள் தேசிய கொடியின் மூவர்ணத்தை ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி கொடி கொண்டுள்ளது. எனவே அனைவரும் எங்களை எளிதாக அடையாளம் கண்டு கொள்வார்கள். மேலும், எங்களுக்கென்று விசேஷமான சாய்கோவ்ஸ்கி இசையும் உள்ளது, இவையெல்லாம் எங்கள் ஒலிம்பிக் அணிக்கு கிடைத்துள்ள தனித்த அடையாளங்கள் தான் என ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.
2022 பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளிலும் ரஷ்யா இதே பெயரில்தான் கலந்துகொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.