உலகில் நடக்கும் நிகழ்வுகளை, அதன் உண்மை நிலையில் இருந்து தவறாமல், யாருக்கும் அஞ்சாமல் மக்களுக்கு வழங்குவதே பத்திரிகைகள். இவை சுதந்திரமாக செயல்பட்டால் தான், உண்மை நீடிக்கும்.
சர்வதேச பத்திரிகை சுதந்திர தினம்:-
பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படை உரிமைகளை கட்டிக்காப்பது, பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலை தடுப்பது போன்ற நோக்கத்துடன் ஐ.நா. சார்பில் 1993 முதல் மே 3ம் தேதி சர்வதேச பத்திரிகை சுதந்திர தினம் கடைபிடிக்கப்படுகிறது.
ஆப்பிரிக்கப் பத்திரிகைகளால் கூட்டாக 1991 ஆம் ஆண்டு இந்நாளிலேயே “பத்திரிகை சுதந்திர சாசனம்” (Declaration of Windhoek) முன்வைக்கப்பட்டது.
உலக பத்திரிகை சுதந்திர நாள் (World Press Freedom Day) என்பது பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் “மனித உரிமைகள் சாசனம்” பகுதி 19 இல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் அவையினால் சிறப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.
உலகில் எத்தனையோ பத்திரிகைகள் உள்ளன. அதன் பெயர் மற்றும் மொழிகளில் மட்டுமே வேறுபாடு இருக்கிறதே தவிர அதன் செயல்பாட்டில் அல்ல. பல்வேறு சூழல்களையும் சமாளித்து, மக்களுக்கு செய்திகளை வழங்கும் பத்திரிகையாளர்களின் சமூக சேவை பாராட்டுக்குரியது.
எப்படி வந்தது:-
மிகுந்த ஆபத்து காலத்தில், உலகில் எங்காவது பத்திரிகை சுதந்திரம் பாதிக்கப்பட்டால், அதற்கு எதிராக போராடும் தனி நபர், பத்திரிகை, தொண்டு நிறுவனங்களுக்கு ‘யுனெஸ்கோ’ சார்பில், 1997 முதல் ஆண்டுதோறும் விருது வழங்கப்படுகிறது. இது ‘குல்லர்மோ கானோ இசாசா’ என்ற கொலம்பிய நாட்டு பத்திரிகையாளரின் பெயரால் வழங்கப்படுகிறது.
‘எல் எஸ்பெக்டேட்டர்’ என்ற பத்திரிகையில் பணிபுரிந்த இவர், போதை பொருள் மாபியா
கும்பலின் சட்டவிரோத கடத்தலை அம்பலப்படுத்தியதால், பத்திரிகை அலுவலகத்தின் வாயிலில், 1986ல் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகளும் கொல்லப்பட்டனர்.
அந்த பத்திரிகையாளரின் சேவையை பாராட்டி, விருதுக்கு அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது.
பத்திரிக்கை/ஊடகச் சுதந்திரம் என்பது ஊடகங்கள் மிரட்டலும் தணிக்கையும் இல்லாமல் தகவலை வெளியிடுவதற்கான சுதந்திரம் ஆகும்.
சட்டமன்றம், நிர்வாகம், நீதிமன்றம், ஊடகம் ஆகியவை மக்களாட்சியின் நான்கு தூண்களாக கருதப்பட்டுகின்றன. அதன் நீட்சியாக சுதந்திரம் ஊடகம் சமூகத்தின் முக்கிய அங்கமாக கருதப்படுகிறது.
நேர்டிக் நாடுகள், கனடா, ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஊடகங்கள் மிகச் சுதந்திரமாக இயங்குகின்றன. சீனா, ஈரான், வட கொரியா, கியூபா, இலங்கை ஆகிய நாடுகளில் ஊடகங்கள் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியா ஒரளவு கட்டுப்பாடுகளைக் கொண்ட ஒரு இடைப்பட்ட நாடாக உள்ளது.
இந்த வருடத்திற்கான சர்வதேச பத்திரிகை சுதந்திர குறியீட்டில் முதல் 5 இடங்களை ஐரோப்பிய நாடுகளை பெற்றுள்ளன அதேபோல கடைசி பத்து இடங்களில் அதிகமாக ஆசிய நாடுகளே இடம்பெற்றுள்ளன.
இந்த வருடம் இந்தியா 2 இடங்கள் கீழிறங்கி 142வது இடத்தில் உள்ளது.