நியூயார்க்:-
அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, பில்கேட்ஸ், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அமெரிக்க எதிர்கட்சி வேட்பாளர் ஜோ பிடென் உள்ளிட்ட முக்கிய உலக பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகளை ஹேக்கர்கள் ஹேக் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலக அளவில் ஹேக்கிங் என்பது இணைய செயல்பாட்டிற்கு மிகப் பெரிய பயத்தையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தி வருகிறது. ஹேக்கிங் மூலம் அரசின் மிக முக்கியமான இணையத்தில் கூட ஹேக்கர்கள் நுழைந்துவிடுகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்காவின் முக்கிய பிரபலங்களின் ட்விட்டர் கணக்கு ஒரே நேரத்தில் ஹேக் செய்யப்பட்டது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, தற்போது வரவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோ பிடன், உலக பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ், எலான் மஸ்க், கேன் வெஸ்ட், கிம் கர்டாஷின்வெஸ்ட், ஆப்பிள், ஜெப் பெசோஸ், மைக் ப்ளூம்பெர்க், ஆகியோரது ட்விட்டர் கணக்குகளை ஒரு மோசடி கும்பல் ஹேக் செய்தது. மேலும் அவர்களுடைய ட்விட்டர் பக்கங்களில் பிட்காயினுக்கு விளம்பரம் செய்யும் வகையில் ட்விட் செய்யப்பட்டிருந்தது.
அந்த ட்விட்டர் பதிவில்:-
“நாங்கள் உங்களுக்கு பிட்காய்ன் மூலம் இரண்டு பணம் வழங்குகிறோம். நீங்கள் ஆயிரம் டாலர் அனுப்பினால், 2 ஆயிரம் டாலர் திரும்ப வழங்குவோம். 30 நிமிடத்துக்குள் திரும்ப வழங்கப்படும்” என்று பதிவிட்டு ஒரு பிட்காய்ன் லிங்கையும் அனுப்பியுள்ளனர்.
பில்கேட்ஸின் ட்விட்டரில்:-
நான் திரும்பக் கொடுக்கவேண்டும் என்று எல்லோரும் கேட்கின்றனர். இதுதான் அந்த நேரம். 2 ஆயிரம் டாலர் திரும்ப வழங்குவோம். 30 நிமிடத்துக்குள் திரும்ப வழங்கப்படும் என்று ஒரு ட்விட் செய்யப்பட்டது.
அதேபோல, ஒபாமா ட்விட்டர் பக்கத்திலும்:-
கொரோனாவின் காரணமாக நான் என்னுடைய சமூகத்துக்கு எல்லாத்தையும் திரும்ப வழங்கப் போகிறேன். என்னுடைய முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ள எல்லா பிட்காயின்களையும், நான் இரட்டிப்பாக திரும்ப அனுப்பப் போகிறேன் என்று குறிப்பிட்டிருந்தது.
இதுகுறித்து விளக்கமளித்த ட்விட்டர் நிர்வாகம்:-
“ட்விட்டர் கணக்குகளில் ஏற்பட்ட ஹேக் குறித்து தெரிந்தது. இதுதொடர்பாக நாங்கள் விசாரணை செய்து வருகிறோம். அதனை சரிசெய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. விரைவில் இதுகுறித்து விளக்கமளிப்போம்” என்று தெரிவித்துள்ளது.