பாகிஸ்தான்:-
பாகிஸ்தானில் 8 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்நாட்டு மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் கைபர் பஹ்தூன்வா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தை சேர்ந்த மடிஹா என்ற 8 வயது சிறுமி கடந்த சனிக்கிழமை அருகில் உள்ள கடைவீதிக்கு சென்றுள்ளார். வெகு நேரம் ஆகியும் கடைக்கு சென்ற சிறுமி வீடு திரும்பாததால் சிறுமியின் குடும்பத்தினர், அவரை பல இடங்களிலும் தேடி அழைந்துள்ளனர். எங்கு தேடியும் சிறுமி கிடைக்காத காரணத்தால் அவரது குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் விசாரித்து வந்த நிலையில், காணாமற்போன சிறுமி சரோகேல் என்ற கிராமத்தின் அருகே ஒரு புதரில் கொடுரமாக கொல்லப்பட்ட சிறுமி மடிஹாவின் உடல் கிடைத்தது.
சிறுமியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற தகவல் பரவியது அந்த கிராமத்தினர் போராட்டத்தில் குதித்தனர்.
பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இதனிடையே சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி #JusticeForMadiha #HangTheRapists என்ற ஹேஷ்டேக்களை சமூகவலைதளங்களில் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.