வளர்ச்சின்மையால் பள்ளியில் சக மாணவர்கள் கிண்டல் செய்யப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளான சிறுவன் குவாடனுக்கு மிகப்பெரிய கௌரவம் கிடைத்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு இணையத்தில் வைரலாக பரவிய சிறுவனின் அழுகை வீடியோவை இந்த உலகம் அவ்வளவு எளிதில் மறந்திருக்காது. பிறப்பிலேயே அரிய நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவன் போதிய வளர்ச்சி இன்றி பள்ளியில் சக மாணவர்கள் கிண்டல் செய்யப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளானான்.
அந்த மன உளைச்சலில், தான் செத்துப் போகப் போவதாக அவன் கதறி அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இந்த வீடியோவை பதிவு செய்த அவரது தாயார் இதுபோன்ற ‘குறைபாடு உள்ள குழந்தைகளை கிண்டல் செய்து அவர்களை காயப்படுத்தாதீர்கள்’ என வேண்டுகோள் விடுத்தார்.
இதனை தொடர்ந்து சிறுவனுக்கு உலகம் முழுவதும் ஆதரவு கரங்கள் நீண்டன பல சினிமா நட்சத்திரங்கள் அவனுக்கு ஆதரவாக குரல் எழுப்பினர் மேலும் சிறுவனைப் போல வளர்ச்சியின்மையால் பாதிக்கப்பட்ட ஹாலிவுட் நடிகர் பிராட் வில்லியம்ஸ் சிறுவனுக்காக ட்விட்டர் மூலம் நிதி திரட்டினார்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் புகழ்பெற்ற ரக்பி சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டியை துவக்கி வைக்கும் கவுரவம் சிறுவனுக்கு வழங்கப்பட்டது. உள்ளூர் ரக்பி சாம்பியன்ஷிப் போட்டியில் பந்துடன் மைதானத்துக்குள் நுழைந்த சிறுவனின் வருகையை திரண்டிருந்த ஆயிரக்கணக்கான கைதட்டி ஆரவாரம் செய்தனர். மன உளைச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு இந்த சம்பவம் பெரும் உற்சாகத்தை அளித்துள்ளதாக அவரது தாயார் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்கள் வைரலாகி வருகிறது.