அமெரிக்க அதிபர் டிரம்ப் மீதான பதவி நீக்க தீர்மானம், நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. அவர் மீதான குற்றச்சாட்டு குறித்து செனட் சபையில் அடுத்த மாதம் விவாதம் நடைபெறவுள்ளது.அடுத்த ஆண்டு அதிபர் தேர்தலில் அதிபர் டிரம்புக்கு எதிராக, ஜனநாயக கட்சியைச் சேர்ந்த முன்னாள் துணை அதிபர் ஜோ பிடென் போட்டியிடுகிறார்.
அவருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதத்தில், உக்ரைனில் அவரது மகன் பணியாற்றும் எரிவாயு நிறுவனத்தில் விசாரணை மேற்கொள்ள அந்நாட்டு அதிபர் விளாடிமர் ஜெலன்ஸ்கிடம் டிரம்ப் வலியுறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதிபர் தனது பதவியை தவறாக பயன்படுத்தியதாகவும், அவர் மீது பதவி நீக்க தீர்மானத்தை ஜனநாயகக் கட்சி கொண்டு வந்தது. தன் மீதான புகாரை நாடாளுமன்றத்தில் விசாரிக்க ஒத்துழைப்பு அளிக்க அதிபர் டிரம்ப் மறுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
பல்வேறு கட்ட விசாரணைக்கு பின், அதிபர் டிரம்ப் மீது பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர அனுமதி அளித்தன. தொடர்ந்து, அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் நேற்று முன்தினம் பதவி நீக்க தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு சுமார் 14 மணி நேரம் நடந்த இந்த விவாதத்தில் குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்தை தெரிவித்தனர்.
பிரதிநிதிகள் சபையில் ஜனநாயக கட்சிக்கு 236 பேர் உள்ளனர். டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு 197 பேர் உள்ளனர். பதவி நீக்க தீர்மானத்தின் முதல் குற்றச்சாட்டான அதிகார துஷ்பிரயோகம் மீது ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதற்கு ஆதரவாக 230 ஓட்டுக்களும், எதிராக 197 ஓட்டுக்களும் பதிவானது. இதனால் பிரதிநிதிகள் சபையில் அதிபர் டிரம்ப் மீதான கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பதவி நீக்க தீர்மானத்தை எதிர்கொண்ட 3வது அதிபர் டிரம்ப் என்பது குறிப்பிடத்தக்கது.