ஹாங்காங்:-
கொரோனா வைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு தான் பரவும் என்று விஞ்ஞானிகள் கூறி வருகிறார்கள். இந்நிலையில் ஹாங்காங் நகரில் பூனை ஒன்றிற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது.
ஹாங்காங் நகரைச் சேர்ந்த 25 வயதான பெண் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அவரது உடல் நிலை மோசமானதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இவர் ஹாங்காங் நகரில் உள்ள பார் ஒன்றில் சென்ற பிறகு தனது உடல்நிலை மோசமானதாக தெரிவித்துள்ளார்.
இவர் வளர்த்து வந்த பூனைக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் பூனைக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது என நகர விவசாய மற்றும் மீன்வளத் துறை (City Agriculture and Fisheries Department) தெரிவித்துள்ளது.
இதுபோல் கடந்த வெள்ளிக்கிழமை பெல்ஜியம் நாட்டில் பூனை ஒன்றிற்கு தொடர்ந்து டயரியா, வாந்தி மற்றும் சுவாச பிரச்சனை இருந்தது. இதைத் தொடர்ந்து அதன் மலத்தை பரிசோதித்ததில் அதற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
எனினும் ஆய்வாளர்கள் விலங்குகள் மூலமாக மனிதர்களுக்கு கொரோனா பரவியதற்கான எந்த சான்றுகளும் இல்லை என்றும், ஆனால் மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கு பரவுயுள்ளது என்றும் கூறியுள்ளனர்.
இதேபோல் ஹாங்காங்கில் 60 வயது பெண்மணி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர் வளர்த்து வந்த 2 நாய்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அவற்றில் ஒன்று பொமரேனியன் வகையைச் சேர்ந்தது. அந்த நாய் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தது, விடுவிக்கப்பட்ட பின்னர் மரணமடைந்தது மற்றொரு நாய் ஜெர்மன் ஷெப்பர்ட் வகையைச் சேர்ந்தது ஹாங்காங்கில் போக் ஃபு லாம் (Pok Fu Lam) என்ற பகுதியில் தற்போது வசித்து வருகிறது.
கொரோனா மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு மட்டும் பரவும் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது மனிதர்கள் மூலமாக விலங்குகளுக்கும் பரவி வருவது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.