சென்னை:-
ஆன்லைனில் மதுபான விற்பனை தொடங்கவில்லை என டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இந்நிலையில் மதுவிற்பனை குறித்து வந்த போலி டாஸ்மாக் ‘லிங்க்’ தடை செய்யப்பட்டுவிட்டதாக சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
டாஸ்மாக் பெயரில் போலி இணையதளம் ஒன்று புதிதாக இயங்க ஆரம்பித்தது. அதில், ஆன்லைனில் மதுபானம் டெலிவரி செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டதோடு, பயனர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்கள் கேட்கப்படுகின்றன.
மது வகைகளின் பெயர்கள், அதன் விலைப் பட்டியல் அதில் இடம்பெற்றிருந்தது. மேலும் சிப்ஸ், சிக்கன் உள்ளிட்ட சைடிஷ் ஆர்டர் செய்வதும் இணையதளத்தில் இடம்பெற்றிருந்தன. இதனால் குஷியான மதுப் பிரியர்கள் உடனே அந்த இணையதள லிங்கை க்ளிக் செய்து தங்களது விவரத்தை பதிவு செய்ய ஆரம்பித்தனர். ஆனால், நேற்று நள்ளிரவு முதல் இணையதளம் செயல்படவில்லை.
இந்தத் தகவல் டாஸ்மாக் நிர்வாகத்தின் கவனத்திற்கு சென்றதையடுத்து, உடனடியாக மறுப்பு தெரிவிக்கப்பட்டது. ஆன்லைனில் மதுபான விற்பனை தொடங்கப்படவில்லை எனவும், சமூக வலைத்தளங்களில் மதுபான விற்பனை தொடர்பாக வரும் லிங்க் போலியானது என்றும் டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்தது.
இந்த நிலையில் மது விற்பனை குறித்து வந்த போலி டாஸ்மாக் ‘லிங்க்’ தடை செய்யப்பட்டுவிட்டதாக சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.