தான் பார்த்த, பழகிய,நேசித்த, கற்றுக் கொண்ட, கொண்டாடிய மனிதர்களை அவர்களுடனான தன் நினைவுகளை மூத்த பத்திரிக்கையாளர் எம்.ஜெ. பிரபாகர் பகிர்ந்து கொள்ளும் தொடர் இது.
தோழர்களை குடும்ப ரீதியாக அரவணைப்பது, அவர்களுக்கு எழும் பிரச்சனைகளை நேரடியாக தலையிட்டு தீர்த்து வைப்பதும் மிகப்பெரிய சவாலான விஷயம். அதே நேரத்தில் கட்சி நடத்தும் போராட்டங்களில் கட்சி உறுப்பினர்கள் மட்டுமன்றி கட்சி குடும்பங்களை பங்கெடுக்க வைப்பதில் இவருக்கான திறமை அசாத்தியமானது.
அதுபோன்று தோழர்களே கட்சி உறுப்பினர்களை அரசியல்ரீதியாக வளர்த்தெடுப்பதில் தென் தமிழகத்தில் இவருக்கு நிகர் வேறு யாருமில்லை என்று நான் கூறுவேன்.அவர் வளர்ந்தது போன்ற கட்சி தோழர்களே வளர்ப்பதில் வல்லவர். அவரது நடவடிக்கைகள் கரடுமுரடாக தானிருக்கும் ஆனால் அவரது உள்ளம் மென்மையானது.
அன்றைய முகவை மாவட்ட ( இன்றைக்கு உள்ள சிவகங்கை விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களை உள்ளடக்கியது) செயலாளராக 13 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து பணியாற்றிய தோழர் எஸ் ஏ பெருமாள்.இன்றைக்குள்ள சிவகங்கை விருதுநகர் ராமநாதபுரம் மாவட்டங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சி இவரது காலத்தில் உருவாக்கப்பட்டது .இன்றைக்கு இருக்கும் தலைவர்கள் இவரால் உருவாக்கப்பட்டவர்கள், வளர்க்கப்பட்டவர்கள்.தோழர் எஸ் ஏ பி பல்துறை வித்தகர்.
மார்க்சிய வகுப்பு எடுப்பதில் அசாத்தியமான திறமை கொண்டவர். தோழர் வி பி சிந்தன் போன்றவர்களால் வார்த்து எடுக்கப்பட்டவர். இவரது வகுப்பில் சின்ன சலசலப்பு கூட இருக்காது .அனைவரையும் அவரது பேச்சால் ஈர்த்து கட்டிப் போட்டுவிடுவார். சிறந்த கவிஞர், சிறந்த பாடலாசிரியர். தேர்தல் காலங்களில் தேர்தலுக்கான பாடல்களை தயார் செய்து தருவது இவரது சிறப்பான பணியாக இருக்கும். அனைத்து மேடைகளிலும் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன் இவரது பாடல்தான் அங்கு ஒலிக்கும் .பலசமயம் தோழரே பாடல்களைப் பாடி பார்வையாளர்களை கட்டிப் போட்டுவிடுவார்.
சிறந்த மொழிபெயர்ப்பாளர். ஆங்கிலத்திலும் தெலுங்கிலும் வரக்கூடிய கட்டுரைகள் கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டு தீக்கதிர் நாளிதழிலும் செம்மலர் மாதத்திலும் தொடர்ச்சியாக வெளிவரும். சிறந்த எழுத்தாளர் .செம்மலர் ஆசிரியராகவும் இருந்த தோழர் எஸ். ஏ. பி. இளம் தோழர்களை வளர்ப்பதில் அசாத்திய திறமை கொண்டவர்.
இன்றைக்கு திரைஉலகம் ஆனாலும் சரி அரசியல் உலகம் ஆனாலும் சரி எழுத்துலகம் ஆனாலும் சரி அரசு ஊழியர்கள் பல்வேறு தோழர்களும் இவரால் உருவாக்கப்பட்டவர்கள். பலரும் தோழர் எஸ் ஏ பி தோழர் என்று அழைப்பதை விட எங்கள் குரு என்று தான் அழைப்பது உண்டு. அந்த அளவிற்கு அவர்களையும் அவர்களை குடும்பத்தாரையும் உருவாக்கிய பெருமை தோழருக்கு உண்டு.
இயற்கையாகவே கட்சி குடும்பங்களோடு நெருக்கமாக இருப்பதால் அந்தந்த குடும்பங்களில் முக்கியமான நிகழ்வுகளை தோழர் தான் தலைமைப் பொறுப்பேற்று நடத்தி வைப்பார் .அந்த வகையில் ஒரு குடும்பங்களுக்கும் உறவுப்பாலம் ஆகவே செயல்பட்டவர் .குறிப்பாக திருமண வயதில் இருக்கும் ஆண் பெண் இருவருக்கும் மற்றொரு தோழர் குடும்பத்தில் உறவு ஏற்படுத்தி திருமண பந்தத்தை ஏற்படுத்தித் தருவார். இப்பணி மூன்றாவது தலைமுறை குழந்தைகளுக்கும் இன்றைக்கும் நடத்தி கொண்டுள்ளார் தோழர்.
இவரது வகுப்பை குறிப்பு எடுத்து தட்டச்சு செய்து அன்றைக்கு இருக்கக்கூடிய சைக்கிளோ ஸ்டைல் மூலம் பிரதி எடுத்து அரசியல்வாதி பங்கேற்கும் அனைத்து தோழர்களுக்கும் வழங்குவோம். பலமுறை மதுரையில் அரசியல் கட்சித் தலைவர்கள் பொதுக் கூட்டங்கள் நடைபெறும். அவருக்கிருந்த பணிகளில் நேரடியாக பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ள இயலாது. என்னிடம் அந்த பொதுக்கூட்டத்தில் திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு .கருணாநிதி பேசுகிறார் அவர் பேச்சை முழுமையாக குறிப்பு எடுத்து வருமாறு பணித்தார்.
நானும் முக்கியமான தலைவர்களின் பேச்சை கேட்டு குறிப்பெடுத்து காலையில் அவரை சந்திக்கும் போது வழங்குவதுண்டு. இதில் சில நாட்கள் அரசியல் கட்சி தலைவர்களின் பேச்சை குறிப்பெடுக்க தவறி இருப்போம். அந்த மாதிரி சூழலில் அதிகாலை நாளிதழ்களில் வந்த செய்திகளின் அடிப்படையில் குறிப்பு எடுத்து கொடுத்த நிலையும் உண்டு. ஒரு முறை தலைவர் கருணாநிதி பொதுக்கூட்டம், அதை குறிப்பெடுத்து வரச்சொன்னார். நான் அருகிலிருந்த சினிமா தியேட்டரில் படம் பார்த்துவிட்டு காலையில் வழக்கம்போல் நாளிதழில் வந்த செய்தி அடிப்படையில் குறிப்பு எழுதிக் கொடுத்து விட்டேன்.
ஆனால் தோழர் என்னிடம் அந்தத் தியேட்டரில் இந்த வரிசையில் நீ அமர்ந்திருப்பது கேள்விப்பட்டேன் என்று கேட்டார் எனக்கு ஆச்சரியமாக இருந்தது மாட்டிக்கொண்டோம் என்ற கவலையும் இருந்தது. பின்புதான் நானும் படம் பார்க்க தியேட்டருக்கு வந்திருந்தேன் என்று நகைச்சுவையோடு பகிர்ந்து கொண்டார்.
கட்சி தோழர்களை வளர்ப்பதில் , கண்காணிப்பதில் அவரது பங்கு பிரதானமாக இருந்தது. இந்த கண்காணிப்பில் வளர்ந்தவன் தான் நானும். இன்றைக்கும் மார்க்சிய வகுப்பு எடுப்பதில் மிகச்சிறந்தவர் தோழர் எஸ். ஏ. பெருமாள்.
தொடரும்