சென்னை:-
திமுக அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதியை சென்னை ஆலந்தூரில் உள்ள அவரது வீட்டில் வைத்து இன்று (சனிக்கிழமை) அதிகாலை போலீஸ் கைது செய்தனர்.
திமுக இளைஞரணி சார்பில் அன்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நீதிபதிகள், பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யான் குமார் அளித்த புகாரின் அடிப்படையில் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைதானபின் அவர் நங்கநல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்துவரப்பட்டார்.
அவரது சர்ச்சை பேச்சு குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணை நிறைவு பெற்றதை அடுத்து, அவர் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார்.
கைது தொடர்பாக ஆர்.எஸ். பாரதி கூறியதாவது:-
சீப்பை மறைத்து வைத்து விட்டால் கல்யாணம் நிற்காது. கொரோனா விவகார ஊழல் பற்றி புகாரளிக்கப்படும் யாரையோ திருப்திப்படுத்த என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பிப்.15 ஆம் தேதி அன்பகத்தில் நான் பேசியது சமூக ஊடகங்களில் திரிக்கப்பட்டு வெளியானது என்று தெரிவித்துள்ளார்.
அன்பகத்தில் பிப்ரவரி 14ஆம் தேதியன்று நடந்த கலைஞர் வாசகர் வட்ட விழாவில் பேசிய ஆர்.எஸ். பாரதி:-
தி.மு.க. ஒழிந்தால்தான் தமிழ்நாட்டுக்கு விமோசனம் என எச். ராஜா பேசுவதற்கு அந்த தைரியத்தைத் தந்தது யார்? நாமெல்லாம் கோழைகளாகிவிட்டோம்.
இந்தியாவிலேயே தமிழகம் தலைசிறந்த மாநிலமாக இருக்கிறதென்று சொன்னால் அதற்கு திராவிட இயக்கம்தான் காரணம். வட மாநிலத்துல இருக்குறவனுக்கு அறிவே கிடையாது. ஓப்பனா சொல்றேன். ஒரு ஹரிஜன்கூட மத்தியப் பிரதேசத்தில ஹைகோர்ட் ஜட்ஜ் கிடையாது. தமிழ்நாட்டில் கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகு வரதராஜனை உட்கார வைத்தார். அதற்குப் பிறகு ஏழெட்டு ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் ஜட்ஜாக இருந்தார்கள் என்றால், அது திராவிட இயக்கம் போட்ட பிச்சை என்று பேசினார். தொடர்ந்து பேசிய அவர், தொலைக்காட்சியினர் குறித்தும் கடுமையாக விமர்சித்தார்.
இந்த டிவிகாரனுக இருக்கானுக பாருங்க, அவனுக மாதிரி அயோக்கியனுக உலகத்திலேயே எவனும் கிடையாது. பம்பாயில இருக்க ரெட் லைட் ஏரியா மாதிரி நடத்துறானுக கம்பனிய காசு வருதுங்கிற காரணத்துக்காக எதை வேணா கிளப்பிவிடுறது என்று குறிப்பிட்டார்.