பெங்களூரு:-
கர்நாடகாவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுமி ஒரு கையிலேயே எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாஸ்க் தைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிறுமி சிந்தூரி (10). இவருக்குப் பிறக்கும்போதே இடது முழங்கைக்குக் கீழே எந்தப் பகுதியும் வளர்ந்திருக்கவில்லை. எனினும் மனம் தளராத சிறுமி சிந்தூரி தன்னம்பிக்கையுடன் வளர்ந்தார்.
சன்தேகட்டே காலியன்பூரில் (Santhekatte Kallianpur) உள்ள பள்ளியில் (Mount Rosary English Medium School) 6-ம் வகுப்புப் படித்து வருகிறார் சிந்தூரி. நன்கு படிக்கும் மாணவியாகத் திகழும் இவர், சாரணர் (Scout) இயக்கத்திலும் உள்ளார். சாரணர் சார்பில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாஸ்க் தைத்துக் கொடுக்கும் பொறுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. ஆரம்பத்தில் சற்று தயங்கிய சிந்தூரிக்கு அவரது தாயார் உறுதுணையாக இருந்துள்ளார். அவரது தாயார் அளித்த ஊக்கத்தின் காரணமாக தான் முகக் கவசங்கள் தைத்துள்ளார்.
இந்நிலையில் தனது ஒரு கையாலேயே, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாஸ்க் தைத்துக் கொடுத்திருக்கிறார் சிந்தூரி. மேலும் ஒரு லட்சம் மாஸ்க்குகளை தைப்பதுதான் தனது நோக்கம் என்றும் கூறியுள்ளார் சிறுமி சிந்தூரி.
தனது உடல் குறைபாட்டைப் பலவீனமாக நினைக்காத சிறுமி சிந்தூரி, மாணவர்கள் பலருக்கு முன்னுதாரணமாக இருப்பதாக அவரின் ஆசிரியர்கள் பெருமை கொள்கின்றனர்.