தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் விஷ்ணு விஷால் தற்போது இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் எப்.ஐ.ஆர். படத்தில் நடித்து வருகிறார். அதனைத்தொடர்ந்து மஞ்சிமா மோகன், கௌதம் மேனன் உள்ளிட்டோர்கள் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால், தன்னுடைய பெயரைப் பயன்படுத்தி தவறான குறுஞ்செய்தி அனுப்பப்படுவதாகவும் அவர்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்கும்படி தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தின் மூலம் இத்தகவலை தெரிவித்துள்ளார்.
அதில் மதன் எனப் பெயர் கொண்ட ஒரு நபர், ‘இக்குறுஞ்செய்தி ஒரு தமிழ்த் திரைப்படத்திற்காக அனுப்பப்படுகிறது. புதிய தயாரிப்பாளர் ஒருவர் இப்படத்தை தயாரிக்கவுள்ளார். இந்த செய்தி அவரிடமிருந்தே அனுப்பப்படுகிறது. அவர் உங்களை இப்படத்தில் இணைத்துக் கொள்ள விரும்புகிறார். நல்ல ஊதியம் கிடைக்கும். தாங்கள் விரும்பினால் கூடுதல் தகவல்களை வழங்குகிறேன். இப்படத்தில் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்கிறார்’ எனக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அந்த குறுஞ்செய்தி ஸ்கிரீன் ஷாட்டையும் சேர்த்துள்ளார்.
இது குறித்துப் பதிவிட்டுள்ள விஷ்ணு விஷால், தற்சமயத்தில் அவரது தயாரிப்பு நிறுவனத்தின் படத்தைத் தவிர வேறெந்த படத்திலும் அவர் நடிக்கவில்லை என்றும் இந்த நபர் மீது விரைவில் புகார் அளிக்க இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.