இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு தமிழ் நிலப்பரப்பில் இந்து துவங்கி தான் எழுதப்பட வேண்டும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்று தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் கீழடி அகழாய்வு பணிகளுக்கான பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது கீழடி அகழ்வாய்வு பணிகளை ஒன்றிய அரசு பாதியிலேயே நிறுத்தி விட்டது என்று கூறினார்.
ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட அரிய பொருட்களை காட்சிப்படுத்த, திருநெல்வேலியில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் அருங்காட்சியகம் அமைக்கப்படும். இது பொருநை அருங்காட்சியகம் என அழைக்கப்படும். சங்ககாலத் துறைமுகமான முசிறி, தற்போது பட்டணம் என்ற பெயரில் கேரளாவில் அமைந்துள்ளது. சேரநாட்டின் தொன்மையினை, பண்பாட்டினை அறிந்துகொள்ளும் வகையில், அம்மாநில தொல்லியல் வல்லுநர்களுடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.
கீழடியில் சூரியன், நிலவு, வடிவியல் குறியீடுகள் கொண்ட வெள்ளிக்காசு கண்டெடுக்கப்பட்டது. இந்த வெள்ளிக்காசு கி.மு. 4ஆம் நூற்றாண்டுக்கு, அதாவது மௌரியப் பேரரசர் அசோகர் காலத்திற்கு முற்பட்டது என்று தெரியவந்துள்ளது. சிவகளை பகுதியில் கண்டெடுக்கப்பட்ட நெல்மணிகளின் காலம் கி.மு.1155 என தெரியவந்துள்ளது. எனவே, ‘தண்பொருநை’ என்று அழைக்கப்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் 3200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை உறுதிசெய்ய முடிகிறது.
எகிப்தின் குசிர்-அல்-காதிம் மற்றும் பெர்னிகா, ஓமனின் கோர் ரோரி ஆகிய இடங்களில், தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளன. அந்தந்த நாட்டின் தொல்லியல் வல்லுநர்களோடு இணைந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
தமிழ்ப் பண்பாட்டின் வேர்களைத்தேடி, இந்திய துணை கண்டமெங்கும் அதேபோல் கடல்கடந்து பயணம் செய்து தமிழர்கள் வெற்றித்தடம் பதித்த வெளிநாடுகளிலும் தமிழ்நாடு தொல்லியல்துறை உரிய அனுமதி பெற்று ஆய்வுப்பணிகளை மேற்கொள்ளும்.யாதும் ஊரே யாவரும் கேளிர் என உலகிற்கு அறிவித்த தமிழரின் பண்பாட்டு அடையாளங்களைத்தேடி, உலகெங்கும் பயணம் செய்வோம். இந்திய துணைக் கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சா.கற்பகவிக்னேஷ்வரன்