நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் திரையரங்குகள் மூடுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் ஜனவரி 7 வெளியாக இருந்த RRR திரைப்படத்தை தற்காலிகமாக தள்ளி வைப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’ (ஆர்.ஆர்.ஆர்). பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண், ஆலியா பட் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் தயாராகி உள்ளது.
இப்படம் ஜனவரி மாதம் 7-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்து இருந்தனர். இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், திரையரங்குகள் உள்ளிட்ட அனைத்து அரங்கங்களிலும் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் அதிகபட்சம் 50 சதவீத பார்வையாளர்களுடன் மட்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆர்ஆர்ஆர் பட ரிலீஸ் தேதியை தள்ளிவைப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. “எங்கள் இடைவிடாத முயற்சிகள் இருந்தபோதிலும், சில சூழ்நிலைகள் நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை. பல இந்திய மாநிலங்கள் திரையரங்குகளை மூடிக்கொண்டிருப்பதால், சரியான நேரத்தில் இந்திய சினிமாவின் பெருமையை மீண்டும் கொண்டு வருவோம் என உறுதியளிக்கிறோம். உங்கள் உற்சாகத்தைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள் என்று கேட்பதைத் தவிர வேறு வழியில்லை’ என அறிவித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள ஆர்ஆர்ஆர் பட ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.