டெல்லி:-
இந்திய ரயில்வே இந்திய வரலாற்றில் முதன்முறையாக ஜூலை ஒன்றாம் தேதி 100 சதவீதம் நேரம் தவறாமையை (Puncuality) கடைபிடித்து சாதனை படைத்துள்ளது.
தற்பொழுது நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் நாடு முழுவதும் சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதன்படி நேற்று ஜூலை 1ம் தேதி நாடு முழுவதும் சுமார் 201 ரயில்கள் இயக்கப்பட்டது. இந்த ரயில்கள் புறப்பாடு மற்றும் வருகை ஆகியவற்றை சிறிதும் கால தாமதமின்றி உரிய நேரத்தில் அடைந்துள்ளது.
கடந்த ஜூன் 23ஆம் தேதி நாடு முழுவதும் ஏற்கப்பட்ட ரயில்களில் ஒரே ஒரு ரயில் சற்று காலதாமதம் ஆனதால் 99.54 சதவீதம் காலந்தவறாமை கடைப்பிடித்தது குறிப்பிடத்தக்கது. நேற்று இயக்கப்பட்ட ரயில்கள் அனைத்தும் சரியான நேரத்தில் வருகை புரிந்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது.
இந்த சாதனையை இந்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்:-
கடந்த மே 12 முதல் நாடு முழுவதும் இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் ராஜதானி பாதையில் 15 ஜோடி ரயில்கள் இயக்கப்பட்டன ஜூலை 1 முதல் இந்த பாதையில் 100 ரயில்கள் இயக்கப்படுகிறது. ஆகஸ்ட் 12 வரை அனைத்து பயணிகள் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.