இந்தியாவில் வரும் டிச.15 ஆம் தேதி முதல் தொடங்க இருந்த வழக்கமான சர்வதேச விமான போக்குவரத்து சேவை கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை அடுத்து சில குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் சர்வதேச விமானங்களை இயக்க நிபந்தனைகளுடன் மத்திய அரசு ஒப்பந்தம் போட்டது. அந்த நாடுகளுக்கு மட்டும் தற்போது விமானங்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் மத்திய உள்துறை, வெளியுறவுத்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் இடையிலான ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் அடுத்த மாதம் 15 முதல் வழக்கமான சர்வதேச விமான போக்குவரத்து சேவையை துவங்க முடிவு செய்யப்பட்டது.
ஆனால், தென் ஆப்பிரிக்காவில் அதிக வீரியம் உடைய உருமாறிய புதிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளிலும் ஒமிக்ரான் கொரோனா வேகமாக பரவி வருகிறது.
இதனால், ஜப்பான், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் வெளிநாட்டு பயணிகள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவிலும் சர்வதேச விமான போக்குவரத்து சேவை தொடங்குவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வர்த்தக விமான போக்குவரத்து சேவை மீண்டும் வழக்கமான தொடங்குவது குறித்த முடிவு பின்னர் அறிவிக்கப்படும் எனவும் மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. தற்போது ’ஏர் பபுள்’ முறையில் இயக்கப்படும் விமான சேவை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.