சட்டத்துக்கு புறம்பாக வெளிநாடுகளில் சொத்து சேர்த்துள்ளதாக சச்சின் டெண்டுல்கர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு சச்சின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் சொத்துகளைச் சட்டவிரோதமாக வாங்கிக் குவித்த இந்தியா, பாகிஸ்தான் உள்பட 91 நாடுகளின் அதிபர்கள், முன்னாள் அதிபர்கள் , அரசியல் தலைவர்களின் பெயர்களையும், வெளியிடப்படாத ஆவணங்களையும் பண்டோரா பேப்பர்ஸ் (Pandora Papers) என்ற பெயரில் சர்வதேச புலனாய்வுப் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு ( International Consortium of Investigative Journalists (ICIJ)) வெளியிடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிபிசி, தி கார்டியன் நாளேடு, இந்தியாவில் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 150 ஊடகங்களின் பத்திரிகையாளர்கள் புலனாய்வு செய்து இந்த ஆவணங்களை வெளியிட்டுள்ளனர். ஏறக்குறைய 1.90 கோடி ரகசியக் கோப்புகள் இதில் அடங்கியுள்ளன.
இதில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பெயர் அடிப்பட்டிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சச்சின், அவரது மனைவி அஞ்சலி டெண்டுல்கர் மற்றும் மாமனார் ஆனந்த் மேத்தா ஆகியோர், விர்ஜின் தீவுகளில் இயங்கிய சாஸ் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதாக ஆய்வு அறிக்கை தகவல் தெரிவித்துள்ளது.
ஆனால் சட்ட விரோதமாக வெளிநாட்டில் சொத்து வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டை சச்சின் தரப்பு மறுத்துள்ளது.
இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் அறக்கட்டளையின் இயக்குநர் மிரின்மோய் முகர்ஜி கூறுகையில்,
இந்த விவகாரத்தில் சச்சினின் முதலீடு சட்டப்பூர்வமானது ஆகும். அந்த முதலீடு அவரது வருமானத்திலிருந்தே செலுத்தப்பட்டுள்ளது. இதன் வரி முறையாக கணக்கிடப்பட்டு அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் முதலீடு செய்யப்பட்ட விவரங்கள் அனைத்தும் வெளிப்படையானவை. வரி செலுத்திய ஆவணங்கள் தெளிவாக இருப்பதால், அறிக்கையில் குறிப்பிட்டது போல, எவ்வித குற்றச்செயல்களில் சச்சின் ஈடுபடவில்லை என்றார்.
மேலும், தொழிலதிபர்கள் அனில் அம்பானி மற்றும் நீரவ் மோடி உட்பட மொத்தம் 380 இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.
தவிர, பாப் பாடகர் திவா சகிரா, மாடலிங் தொழில் செய்யும் கிளாடியா சிஃபர். பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு நெருக்கமானவர்கள் வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள், நிதியமைச்சர், நிதி அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும், ஜோர்டான் நாட்டின் அரசர், உக்ரைன் அதிபர், கென்யா, ஈக்வெடார் நாட்டின் பிரதமர்கள், செக் குடியரசின் பிரதமர், பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் நிதிச் செயல்பாடுகள், ரஷ்யாவின் 130 கோடீஸ்வரர்களின் பெயர்கள், அமெரிக்கா, துருக்கி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கோடீஸ்வரர்களின் பெயர்கள் அடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.