புதுடெல்லி:-
கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்க விளைவு ஏற்பட்டால் இழப்பீடு கோர முடியாத படி சட்டரீதியான பாதுகாப்பை சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா கோரி உள்ளது.
வெளிநாட்டு தடுப்பூசிகளான ஃபைசர் மற்றும் மாடர்னா ஆகியவை விரைவில் இந்தியாவிற்கு வர உள்ளன. இந்த மருந்துகளுக்கு மத்திய அரசு இழப்பீட்டு காப்பீடு வழங்கக்கூடும் என்று தெரிகிறது.
அதாவது, தடுப்பூசியால் எந்த பக்க விளைவுகள் ஏற்பட்டால் அந்த நிறுவனங்களிடம் இருந்து பொதுமக்கள் இழப்பீடு கோர முடியாத பாதுகாப்பை மத்திய அரசு வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து தயாரிக்கும் சீரம் நிறுவனமும் இதுபோன்ற சட்டரீதியான பாதுகாப்பைக் கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இழப்பீடு கோருவதில் இருந்து வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டால், இந்திய நிறுவனமான சீரம் மட்டுமல்ல, அனைத்து தடுப்பூசி நிறுவனங்களும் அதே பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் சீரம் நிறுவனம் கூறியுள்ளது.
இதனிடையே, இந்தியாவில் தயாரிக்கப்படும் எந்த தடுப்பூசிக்கும் மத்திய அரசு இதுவரை சட்டரீதியான பாதுகாப்பை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.