டெல்லி துணை முதல் மந்திரி மணிஷ் சிசோடியா ஊழலில் ஈடுபட்டதற்கு ஆதராம் உள்ளது என்றும், தப்ப முடியாது என்றும் பாஜக செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கடந்த ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியது. அதன்படி 849 தனியார் நிறுவனங்களுக்கு மதுக்கடை உரிமங்கள் வழங்கப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக தலைமைச் செயலர் நரேஷ் குமார், துணைநிலை ஆளுநர் சக்சேனாவிடம் கடந்த ஜூலை மாதம் அறிக்கை அளித்தார். இதனையடுத்து மதுக்கடை உரிமம் ஊழல் குறித்து சிபிஐ விசாரணை நடத்த துணைநிலை ஆளுநர் பரிந்துரை செய்தார்.
இந்நிலையில் டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா வீடு உட்பட 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திய போது, மணிஷ் சிசோடியவின் கணினி, செல்போன் மற்றும் முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. இந்த சோதனை தொடர்பாக சிசோடியா மற்றும் 3 அதிகாரிகள், 9 தொழிலதிபர்கள் உட்பட 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே ஆம் ஆத்மியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தால் தனக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்வதாக பாஜக பேரம் பேசுவதாகவும் ஆனால், உயிரே போனாலும் சதிகாரர்களுக்கு அடி பணிய மாட்டேன் என்றும் மணிஷ் சிசோடியா தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் பாஜக செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது ” மணிஷ் சிசோடியா ஊழலில் ஈடுபட்டதற்கு ஆதாரம் உள்ளது என்பதால் அவரால் தப்ப முடியாது என்றும் மதுபானக்கொள்கையில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக பாஜக எழுப்பிய கேள்விகளை திசை திருப்ப ஆம் ஆத்மி முயற்சி செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.