சென்னையில், அதிநவீன மருத்துவக் கருவிகளுடன் (அல்ட்ரா சவுண்ட் மேமோகிராஃபி) நடமாடும் இலவச மார்பகப் புற்றுநோய் பரிசோதனை முகாம் பில்ரோத் மருத்துவமனை சார்பில் தொடங்கப்பட்டுள்ளது.
அக்டோபர் மாதம், உலகம் முழுவதும் மார்பக புற்று நோய் விழிப்புணர்வு மாதமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு மக்களுக்கு மார்பகப் புற்று நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரச்சார நோக்கில், சென்னையில் முதன்முறையாக அதிநவீன மருத்துவக் கருவிகள் (அல்ட்ரா சவுண்ட் மேமோகிராஃபி) பொருத்தப்பட்ட நடமாடும் மார்பகப் புற்றுநோய் பரிசோதனை முகாமினை பில்ரோத் மருத்துவமனை இந்த மாதம் முழுவதும் நடத்தவுள்ளது.
இதற்காக தேர்ந்த மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழு, அக்டோபர் 31 வரை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை சென்னையில் பல்வேறு இடங்களில் தினமும் 100 பேருக்கு 1000 ரூபாய் மதிப்புள்ள மார்பகப் புற்றுநோய் பரிசோதனைகளை இலவசமாக மேற்கொள்ளவுள்ளது. துல்லியமான பரிசோதனைகள் மற்றும் மேல்சிகிச்சை தேவைப்படுபவர்களுக்குத் தகுந்த வழிகாட்டுதல்கள் ஆகியவற்றின் மூலம் சுமார் 15000 மக்கள் பயனடைவார்கள். இம்முகாம் ஜிபிஆர் ஸ்டீல்ஸ் நிறுவனத்தால் ஸ்பான்சர் செய்யப்படுகிறது.
இதனிடையே தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், பில்ரோத் மருத்துவமனையின் “மொபைல் மேமோகிராஃபி நடமாடும் மருத்துவ முகாமை” கொளத்தூர் சென்னை மேல்நிலைப் பள்ளியில் நேற்று (அக்டோபர் 16) தொடங்கி வைக்கிறார்.
இதில், பில்ரோத் மருத்துவமனைகளின் தலைவர் டாக்டர் கல்பனா ராஜேஷ், துணைத்தலைவர் டாக்டர் தீபா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், இன்று இந்த மருத்துவ முகாமை அம்பத்தூர் எம்.எல்.ஏ. ஜோசப் சாமுவேல் அம்பத்தூரில் தொடங்கி வைத்தார்.