ஒரே மாதத்தில் ஜியோ நிறுவனம் 91 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்றதாக வெளியான தகவல் மற்ற நிறுவனங்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்கள் காரணமாக கடந்த இரு மாதங்களாக சேவைக் கட்டணங்களின் விலை உயர்ந்தும், பல்வேறு ஆஃபர்களையும் தொலைதொடர்பு நிறுவனங்கள் மாறி மாறி வழங்குகின்றன.
இந்நிலையில் சமீபத்தில் இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் 2019 அக்டோபர் மாத நிலவரப்படி , இந்தியாவில் ஒட்டுமொத்த செல்போன் மற்றும் லேண்டுலைன் இணைப்புகளின் எண்ணிக்கை 120.48 கோடியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய மாதமான செப்டம்பருடன் ஒப்பிடும்போது 0.80% வளர்ச்சியாகும். மேலும் அக்டோபர் மாதத்தில் நகர்ப்புறங்களில் செல்போன் இணைப்புகள் 68.16 கோடியாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கிராமங்களில் இதன் சேவை 52.31 கோடியாகவும் உயர்ந்துள்ளது. இதனால் ஒட்டுமொத்த செல்போன்களின் எண்ணிக்கை 118 கோடியாக உள்ளது.தொலைத்தொடர்பு நிறுவனங்களை பொறுத்தவரை, ஜியோ நிறுவனம் மட்டும் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. அந்த நிறுவனம் கிட்டத்தட்ட 91 லட்சம் இணைப்புகளை அக்டோபர் மாதத்தில் மட்டும் பெற்று முதலிடம் பிடித்துள்ளது. ஒட்டு மொத்த எண்ணிக்கையில் தற்சமயம் 36.43 கோடி பேர் ஜியோ நிறுவனத்துடன் இணைந்துள்ளதாகவும், இதற்கு அடுத்தபடியாக ஏர்டெல் (13.04 கோடி), வோடாபோன் (11.57 கோடி), பி.எஸ்.என்.எல். (2.23கோடி) என்ற எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளன.