ரோம்:-
சீனாவிற்கு அடுத்தபடியாக கொரானாவால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடு இத்தாலி. இந்நிலையில் கொரானாவை கட்டுப்படுத்தும் முயற்சியாக நாடு முழுதும் ஒட்டுமொத்தமாக சீல் வைக்கப்படுவதாக இத்தாலி பிரதமர் ஜியுஸப்பே கான்ட்டே (Giuseppe Conte) அறிவித்துள்ளார்.
இத்தாலி முழுதும் ஒட்டுமொத்தமாக சீல் வைக்கப்படுவதை ஒட்டி Sicily மற்றும் Sardinia, தீவுகள் உள்பட 6 மில்லியன் மக்கள் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்படுகின்றனர்.
தவிர்க்க முடியாத அல்லது மருத்துவ அவசர தேவைகள் தவிர மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்கள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பொதுஇடங்களில் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. அனைத்து விதமான அரசு, தனியார், விளையாட்டு மற்றும் மத நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சிகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 9,171 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 463 பேர் இதுவரை இறந்துள்ளனர். 724 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர்.
இதற்காக புதிய கட்டுப்பாட்டுச் சட்டங்கள் உருவாக்கப்பட்டு அவை வரும் ஏப்ரல் 3-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என பிரதமர் அறிவித்துள்ளார். பொதுப் போக்குவரத்து செயல்பட்டாலும், மக்கள் வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அரசு கட்டுப்பாட்டை மீறி பயணம் செய்பவர்களுக்கு சிறைத் தண்டனை, அபராதங்கள் விதிக்கப்படும்.
திரையரங்குகள் கேளிக்கை விடுதிகள் அனைத்தும் மூடப்படுகின்றன. ஆனால் உணவு விடுதிகள், கடைகள் உள்ளிட்டவை திறந்து செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது, ஆனால் வாடிக்கையாளர்கள் ஒரு மீட்டர் இடைவெளியை பின்பற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கான கொரானா தடுப்பு நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. சுகாதாரப் பணியாளர்களுக்கான விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.