நைரோபி:-
கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் நடப்பாண்டு முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தான் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அந்நாட்டு கல்வித்துறை செயலாளர் ஜார்ஜ மாகோஹா (George Mahoga) விடுத்துள்ள அறிக்கையில்:-
கொரோனா தொற்று வரும் டிசம்பருக்குள் கட்டுக்குள் வரும் என்று நம்புகிறோம். எனவே அதுவரையில் ஆரம்ப பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நடப்பாண்டு பள்ளி நாட்காட்டியில் இழந்த ஆண்டாக கருதப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றின் வேகம் உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில் கென்யாவில் கடந்த மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன.
அதேபோல, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களும் நிலைமை கட்டுக்குள் வந்த பிறகே திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கென்யாவில் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் அங்கு இரவு நேரத்தில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.