பீஜிங்,
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19வது மத்தியக் குழு ஆறாவது அமர்வை நேற்று தொடங்கியது. மொத்தம் 4 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் சுமார் 400 உறுப்பினர்கள் பங்கேற்பதாக சீன அரசு செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது.
19வது மத்திய கமிட்டியின் ஆறாவது முழு அமர்வு, “கட்சியின் 100 ஆண்டுகால போராட்டங்களின் முக்கிய சாதனைகள் மற்றும் வரலாற்று அனுபவம்” பற்றிய ஒரு முக்கிய தீர்மானத்தை மதிப்பாய்வு செய்தது.
2017 ல் தேர்ந்தெடுக்கப்பட்ட தற்போதைய 19 வது மத்திய குழுவின் பதவி காலம் 2022 வரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சீனா கம்யூனிஸ்ட் கட்சியை புதிய பயணத்தில் வழிநடத்தும் மனிதர் சீ ஜின்பிங் என்றும் தனக்கென சிறிது நேரம் எடுத்துக் கொள்ளாதவர் என்றும் சீ ஜின்பிங் கடின உழைப்பின் மூலம் சீனா நாடு பெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளது என்றும் மாநாட்டில் பங்கேற்றவராகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் மூன்றாவது முறையாக சீன அதிபராக ஜி ஜின்பிங் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
9 ஆண்டுகளாக ஜி ஜின்பிங் சீன அதிபராக உள்ளார். 2022 ஆண்டுடன் ஜி ஜின்பிங் 2வது அதிபர் பதவிக் காலம் முடிவடைய உள்ளது. கட்சி தற்போது ஜி ஜின்பிங் கட்டுப்பாட்டில் உள்ளதால் அவரே மூன்றாவது தடவையாகவும் அதிபராக தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது.
இரண்டுமுறை மட்டுமே ஒருவர் அதிபராக இருக்கலாம் என்ற விதிமுறைகளை கடந்த 2018 ல் கொண்டு வந்த அரசியலமைப்பு திருத்தம் மூலம் ஜி ஜிங்பிங் மாற்றி விட்டார்.எனவே தற்போது நடைபெற்று வரும்19வது மத்தியக் குழு கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.