புது டெல்லி:
நமது நாட்டில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் பத்ம விபூஷன் பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இது இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றாகும்.
3 பிரிவுகளில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதாவது விதிவிலக்கான மற்றும் புகழ்பெற்ற சேவைக்காக பத்ம விபூஷன் விருது வழங்கப்படுகிறது. உயர் வரிசையின் புகழ்பெற்ற சேவைக்கு பத்ம பூஷன் விருது அளிக்கப்படுகிறது. புகழ்பெற்ற சேவைக்கு பத்ம ஸ்ரீ விருது கொடுக்கப்படுகிறது.
இந்த நிலையில் 2020-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று 119 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கினார். இதில் 102 பேருக்கு பத்ம ஸ்ரீ, 10 பேருக்கு பத்ம பூஷன், 7 பேருக்கு பத்ம விபூஷண் என அடங்கும்.
இந்நிகழ்வில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
மறைந்த அமைச்சர்கள் அருண்ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டை சேர்ந்த வர்த்தகர் வேணு ஸ்ரீனிவாசன், ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற பி.வி.சிந்து ஆகியோருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
தமிழ் நாட்டைச் சேர்ந்த சமூக சேவகர் ராமகிருஷ்ணனுக்கு பதம்ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
இதேபோல் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால், நடிகை கங்கனா ரனாவத் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
இது தவிர கலைத்துறையை சேர்ந்த கலி ஷபி மெஹபூப், ஷேக் மெஹபூப் சுபானி, லலிதா மற்றும் சரோஜா சிதம்பரம், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓவியர் மனோகர் தேவதாஸ், பிரதீப் தலபில் , மருத்துவர் ரவி கண்ணன், டெரகோட்டா கலைஞர் முனுசாமி ஆகியோருக்கும் பதம்ஸ்ரீ விருது வழங்கி குடியரசுத் தலைவர் கவுரவித்தார்
.
2021-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டன. இன்று இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு 2021-ஆம் ஆண்டுக்கான பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோன்று பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையாவுக்கு பத்ம ஸ்ரீ, பாடகி சித்ராவிற்கு பத்ம பூஷன் விருது ஆகிவையும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.