தமிழ்நாடு பிரிமீயம் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் முதன்முதலாக ஏழ்மை குடும்பத்தை சேர்ந்த தருமபுரி மாவட்ட வீரர் தேர்வாகி உள்ளார்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே ஏ.மல்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் மாட்டு வியாபாரி சக்திவேல். இவரது மகன் விஜயகுமார்,(24) பி.எஸ்சி., எம்.எஸ்சி., பட்டதாரியான இவர் சிறு வயதில் இருந்தே கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமாக காட்டி வந்துள்ளார்.
இந்நிலையில் சென்னையில் கடந்த 20ம் தேதி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 2020ம் ஆண்டிற்கான தமிழ்நாடு பிரிமீயம் லீக்(டி.என்.பி.எல்.,) டி20 போட்டிக்கான 5ம் ஆண்டு டிராப்ட் வீரர்கள் தேர்வு நடைபெற்றது.
இந்த தேர்வில் 633 விளையாட்டு வீரர்களின் பட்டியல் முன்வைக்கப்பட்டது. இதில் தருமபுரி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் விளையாடி வரும் விஜயகுமார் “சேப்பாக் சூப்பர் கில்லீஸ்” அணிக்காக தேர்வு செய்யப்பட்டார்.
வலதுகை சுழல் பந்து வீச்சாளரான விஜயகுமார் ஏழ்மை குடும்பத்தில் பிறந்து தருமபுரி மாவட்ட சங்கத்தில் இருந்து தமிழ்நாடு பிரிமீயம் லீக் டி20 கிரிக்கெட் போட்டிக்கு தேர்வாகியுள்ளது இதுவே முதல்வீரர் என்ற பெருமை சேர்த்துள்ளார்.