ஹைதராபாத்:-
லண்டனிலிருந்து பெற்றோருக்கு வீடியோ கால் செய்து பெற்றோரிடம் பேசிய இளைஞர் மறுநாளே மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் வாரங்கல் அருகே ராம்நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் கைதா சதீஷ் (26) (Kaitha Sathish). இவர் கடந்த ஜனவரி மாதம் உயர் கல்வி பயில்வதற்காக லண்டன் சென்றுள்ளார்.
கடந்த சனிக்கிழமை வீட்டிற்கு வீடியோ கால் செய்த சதீஷ் தனது தந்தை குமாரசாமி மற்றும் தாயார் சாரதா ஆகியோரிடம் பேசியுள்ளார். லண்டனில் தான் பாதுகாப்பாக இருப்பதாகவும் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறியுள்ளார். பெற்றோர் அங்கு கவனமாக இருக்கும் படியும், உடல் நலத்தை பார்த்துக் கொள்ளும்படியும் கூறியுள்ளார்கள்.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை சதீஷ் தனது கட்டிலிலிருந்து விழுந்துள்ளார், சத்தம் கேட்டு அவரது நண்பர்கள் அவரது அறைக்குச் சென்றுள்ளனர் அறையின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததால், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தனது கட்டிலில் இருந்து கீழே விழுந்து சுயநினைவின்றி கிடந்துள்ளார். உடனடியாக அவரை அருகில் உள்ள ராயல் பிரின்ஸ்டன் (Royal Princeton) மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சதீஷ் மாரடைப்பு காரணமாக ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
முந்தினம் வீடியோ காலில் பேசிய மகன் மறுதினமே மரணமடைந்த சம்பவம் சதீஷின் பெற்றோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த சம்பவம் கேள்விப்பட்ட கிராமத்தினர் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.
சதீஷின் நண்பரான திலீப் ராஜ் தெலுங்கானா தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கே டி ராமராவ்-க்கு சதீஷின் உடலை மீண்டும் இந்தியா கொண்டு வருவதற்கு உதவி செய்யுமாறு ட்விட்டரில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதையடுத்து அமைச்சர் கே டி ராமராவ் வெளியுறவுதுறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோருக்கு சதீஷின் உடலை இந்தியா கொண்டுவர உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.