வாஷிங்டன்:-
கொரோனா விவகாரத்தில் சீனா மீது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அவ்வப்போது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். வைரஸ் தொடர்பான விவரங்களை சீன அரசு மறைத்து விட்டதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.
இந்நிலையில் வாசிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கொரோனா விவகாரத்தில் உலக சுகாதார மையம் சரியாக செயல்படவில்லை என்று குற்றம்சாட்டினார். சீனாவுக்கு ஆதரவாக அந்த அமைப்பு இயங்கியதாகவும் அவர் புகார் தெரிவித்தார். இதனால், உலக சுகாதார மையத்துடன் உள்ள அனைத்து உறவையும் முறித்துக் கொள்வதாக டிரம்ப் கூறியுள்ளார்.
மேலும் அமெரிக்காவில் வாழும் சீன ஆராய்ச்சியாளர்களை உடனடியாக வெளியேறுமாறு டிரம்ப் தெரிவித்துள்ளார். சீனா ஆராய்ச்சியாளர்களால் அமெரிக்காவுக்கு ஆபத்து என்றும் அவர் கூறியுள்ளார். சீனாவின் பிடியில் உலக சுகாதார அமைப்பு சிக்கியுள்ளதாகவும், ஆண்டுக்கு 450 மில்லியன் டாலர் வழங்கி வந்த அமெரிக்காவின் உறவை விட, ஆண்டுக்கு 40 மில்லியன் டாலர் கொடுக்கும் சீனாவுடன், உலக சுகாதார அமைப்பு உறவு வைத்துள்ளதாக ட்ரம்ப் குற்றம் சுமத்தி உள்ளார்.
அமெரிக்கா விலகியதால் உலக சுகாதார மையத்திற்கு கடும் நிதி நெருக்கடி ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவை தடுக்கும் பணியில் தொய்வு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.