தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் மக்கள், அதனோடு இலவச இணைப்பாக நோய்களையும் வாங்கி வரும் சூழலுக்கு ஆளாகியுள்ளனர்.
மக்கள் காசு கொடுத்து வாங்கி குடிக்கும் குடிநீரின் தரம் குறித்து அறிய பல்வேறு இடங்களில் பல்வேறு பெயர்களில் விற்கப்படும் தண்ணீர் பாட்டில்கள், குடிநீர் கேன்கள் ஆகியவற்றின் 187 மாதிரிகளை சேகரித்த சென்னை மாநகராட்சி அவற்றை தரப்பரிசோதனை ஆய்வுக்கு அனுப்பியது.
குடிநீரின் தரம் குறித்த ஆய்வு முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கின்றன.ஆய்வுக்காக சேகரிக்கப்பட்ட 187 மாதிரிகளில் 40 மாதிரிகள் குடிப்பதற்கு ஏற்றவை அல்ல என்பது தெரியவந்தது. எஞ்சியுள்ள 147 மாதிரிகளில் 30-ல் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் 20 மாதிரிகள் பிரபலமான பிராண்டுகளின் பெயரில் தயாரிக்கப்பட்ட போலியான நிறுவனத் தயாரிப்புகள் என தெரியவந்துள்ளது.
இந்த விவரங்களை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திடம், சென்னை மாநகராட்சி அறிக்கையாக தாக்கல் செய்துள்ளது. இது போன்ற தரமற்ற நீரை அருந்துவதால் வயிற்றுப்போக்கு, காலரா, டைஃபாய்டு உள்ளிட்ட நோய்களுக்கு ஆளாக நேரிடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.