ஜார்கண்ட் மாநிலத்தின் பதினோராவது முதலமைச்சராக ஹேமந்த் சோரன் இன்று பதவி ஏற்றார்.ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி 47 இடங்களில் வெற்றி பெற்றது.
இதனை அடுத்து ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக ஹேமந்த் சோரன் கடந்த செவ்வாய்க்கிழமை ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரிய ஹேமந்த் சோரன் 29ஆம் தேதி பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டது. இந்த பதவியேற்பு நிகழ்ச்சிக்கு மம்தா பானர்ஜி, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட பல மாநிலங்களில் அரசியல் கட்சி தலைவர்களுக்கும், மாநில முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அதன்படி இன்று நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் ஜார்கண்டில் புதிய முதலமைச்சராக ஹேமந்த் சோரன் முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு மாநில ஆளுநர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். மேலும் இந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை தலைவர் ஆலாம்கர் அலாம், மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏ சத்தியானந்த் போக்தா அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.