புதுச்சேரி:
புதுச்சேரியில் தொடங்கப்பட்டுள்ள ஹோட்டல் ஒன்றில் மாமியார்-மருமகள் ஒன்றாக சாப்பிட்டால் 50% கட்டணம் இலவசம், ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டால் 100% இலவசம் என்ற அறிவிப்பு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
புதுச்சேரி நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்று படகுத்துறை அருகே தொடங்கப்பட்டுள்ள ஹோட்டல் ஒன்றில் வித்தியாசமான பல சலுகைகளை அறிவித்துள்ளன.
அதில், சாப்பிட வருபவர்கள் 100 திருக்குறளை ஒப்புவித்தால் அவர்களுக்கு பிரியாணி மற்றும் காடை வறுவல், இறால் தொக்கு, நண்டு வறுவல், வஞ்சிரம் மீன் உள்ளிட்ட 20 வகை அசைவ விருந்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாமியார் – மருமகள் ஒன்றாக வந்து சாப்பிட்டால் அவர்களுக்கு 50% சதவீத கட்டணம் இலவசம்.அவர்கள் ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டால் முற்றிலும் இலவசம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை பார்த்து இதுவரை 4 பேர் 100 திருக்குறளை ஒப்புவித்து பிரியாணி சாப்பிட்டு சென்றுள்ளனர். ஆனால் இதுவரை ஒரு மாமியார், மருமகள் கூட வரவில்லை என்பது தான் ஹைலைட்.
எழுத்தாளர் ஞானபானுவின் மகனான ஹோட்டல் முதலாளி நிருபன், தந்தையின் தமிழ் ஆர்வத்தால் தூண்டப்பட்டு இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருப்பதாக கூறியுள்ளார். மேலும் குடும்ப ஒற்றுமையை வலியுறுத்தும் நோக்கில் மாமியார்-மருமகள் திட்டம் அறிவிக்கப்பட்டதாகவும் கூறினார்.