உசேன் போல்டை விட வேகமாக ஓடிய கர்நாடக இளைஞரின் வீடியோ வைரலாகி வரும் நிலையில், சர்வதேச போட்டிகளுக்கு அவரை தயார்படுத்தும் விதமாக பயிற்சி அளிக்க திட்டமிட்டு இருப்பதாக மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே அய்கலாவில் சமீபத்தில் கம்பளா போட்டி நடைபெற்றது.
எருமை மாடுகளுடன் வீரர்கள் ஓடும் அந்த போட்டிக்காக சுமார் 142.5 மீட்டருக்கு தண்ணீர், சகதியுடன் தடம் அமைக்கப்பட்டிருந்தது.
போட்டியில் கலந்து கொண்ட கட்டட தொழிலாளியான சீனிவாச கவுடா (28) என்ற இளைஞர், பந்தய தூரத்தை வெறும் 13.62 நொடியில் கடந்தார்.
அதாவது 100 மீட்டர் தூரத்தை 9.55 விநாடிகளில் சீனிவாச கவுடா கடந்துள்ளார். உலகில் மிக வேகமாக ஓடும் மனிதராகக் கருதப்படும் ‘மின்னல் வீரர்’ உசேன் போல்ட் 9.58 விநாடிகளில் 100 மீட்டர் ஓட்ட போட்டியைக் கடந்ததே அதிகபட்ச உலக சாதனையாக இதுவரை உள்ளது. அதனை முறியடிக்கும் விதமாக சீனிவாச கவுடாவின் மின்னல் வேக ஓட்டம் அமைந்து இருந்தது.
அவரது உடல்கட்டைப் பார்த்தாலே தடகளப் போட்டியில் பல சாதனைகள் படைக்கும் தகுதி இருக்கிறது என்பதை அறிய முடியும் என்று மஹிந்திரா நிறுவனத்தின் சிஇஓ ஆனந்த் மஹிந்திரா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
மேலும், 100 மீட்டர் போட்டிகளில் பங்கேற்றும் விதமான சீனிவாச கவுடாவுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் அல்லது கம்பாலா போட்டியை ஒலிம்பிக்கில் சேர்க்க வேண்டும் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவிற்கு கோரிக்கை விடுத்தார்.
அதற்குப் பதிலளித்த ரிஜிஜூ தான் சீனிவாச கவுடாவுக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளதாக ட்விட்டரில் பதிலளித்துள்ளார்.
இதனிடையே, விளையாட்டு துறை நிபுணர்கள் சீனிவாச கவுடா-வின் இந்த மின்னல் வேக ஓட்டம் அறிவியல் படி சாத்தியம் குறைவு என்றும் அந்த மாடுகளை பிடித்து ஓடியதால் தான் இவ்வளவு வேகமாக சீனிவாச கவுடா ஓடினார் என்றனர். எனினும் அவருக்கு பயிற்சி அளித்து ஓட்ட திறனை சோதித்து பார்க்கலாம் என்றனர்.