லாபத்தில் இயங்கி வந்த லட்சுமி விலாஸ் வங்கி, கடந்த 4 ஆண்டுகளாக சரிவை சந்தித்து,தற்போது கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. நஷ்டம் அதிகரித்து வருவதால் திவால் நிலைக்கு தள்ளப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
வங்கி தனது செயல்பாடுகளை மீட்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கியது. ஆனால், அதற்கு பலன் கிடைக்காததால் வாடிக்கையாளர்களின் நலன் கருதி தற்போது இந்த வங்கியின் செயல்பாடுகளை ரிசர்வ் வங்கி (RBI) தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. பணம் எடுக்க கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
லட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களுடைய வங்கி கணக்கில் இருந்து இன்று முதல் ஒரு மாதத்திற்கு ரூ. 25 ஆயிரத்திற்கு மேல் எடுக்க முடியாது என RBI தெரிவித்தது. இதனால் வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். டெபாசிட் செய்த தங்களது பணம் கிடைக்குமா??? என்ற அச்சமும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் டி.என்.மனோகரனை நிர்வாக அதிகாரியாக RBI நியமித்துள்ளது. மேலும், டெபாசிட் செய்தவர்களின் பணம் பாதுகாப்பாக உள்ளது. டெபாசிட் செய்தவர்கள் அச்சப்பட வேண்டாம். லட்சுமி விலாஸ் வங்கியில் பணம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
2020-ம் நிதியாண்டில் லட்சுமி விலாஸ் வங்கி மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே லட்சுமி விலாஸ் வங்கி கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது.ATM மற்றும் வங்கிக் கிளைகள் உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்ட டி.என் மனோகரன் தெரிவித்துள்ளார்.