சென்னை-
தமிழகத்திற்கு ஒரு மத்திய அமைச்சர் கிடைத்திருக்கிறார் என்று மகிழ முடியவில்லை என்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் 43 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இவர்களில் 15 பேர் கேபினட் அமைச்சர்கள், 28 பேர் இணை அமைச்சர்கள்.
இவர்களில், தமிழகத்தில் இருந்து மத்திய இணை அமைச்சராக தேர்வாகி இருக்கும் எல். முருகனுக்கு மீன்வளத்துறை, தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை கால்நடை மற்றும் பால்வளத் துறை இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
தமிழகத்திற்கு ஒரு மத்திய அமைச்சர் கிடைத்திருக்கிறார் என்று மகிழ முடியாதபடி இருக்கிறது அமைச்சரவை விரிவாக்கம்.
நாடு அனைத்துத் துறைகளிலும் பின்னடைந்திருக்கிறது. இந்தச் சரிவிலிருந்து மீளும் நோக்கத்தில் அமைச்சரவை மாற்றம் நடந்திருக்கவேண்டும்.
ஆனால், உள்கட்சித் தலைவர்கள், வேறு கட்சிகளிலிருந்து இணைந்தவர்கள், வரவிருக்கிற மாநில தேர்தல்கள் ஆகியவற்றை மனதில் வைத்து நடந்திருக்கும் இந்த விரிவாக்கம் பாஜகவிற்கு வேண்டுமானால் நன்மை பயக்கலாம். நாட்டிற்கு இதனால் ஆகப்போவதென்ன? என கூறியுள்ளார்.