சென்னை
இலங்கை தமிழர்கள் முகாம்களில் உள்ள 7,469 பழுதடைந்த வீடுகளும் 231 கோடி ரூபாய் செலவில் புதிதாகக் கட்டித் தரப்படும். அவர்களது குழந்தைகள் கல்விக்காக 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். விலையில்லா எரிவாயு அடுப்பும் இணைப்பு வழங்கப்படும் என சட்டசபையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இலங்கைத் தமிழர் குடும்பங்களை சேர்ந்த பொறியியல் படிக்க தேர்ச்சி பெற்ற மாணவர்களில் மதிப்பெண் அடிப்படையில் முதல் 50 பேரின் கல்வி மற்றும் விடுதிக் கட்டணங்களைத் தமிழக அரசே ஏற்கும். முதுநிலை படிக்கும் மாணவர்களின் கல்விச் செலவுகளையும் அரசே ஏற்கும். தொழிற்கல்வி படித்து வரும் இலங்கை அகதி மாணவர்களுக்கு உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும்.
இலங்கைத் தமிழர் குடும்பங்களை சேர்ந்த பாலிடெக்னிக் படிக்க உள்ள மாணவர்களுக்கு ரூ2,500லிருந்து ரூ10,000 ஆகவும், கலை & அறிவியல் மாணவர்களுக்கு ரூ3000ல் இருந்து ரூ12,000 ஆகவும், இளநிலை தொழிற்கல்வி மாணவர்களுக்கு ரூ5000ல் இருந்து ரூ20,000 ஆக உதவித்தொகை உயர்த்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
இலங்கை தமிழர்களுக்கு வழங்கப்படும் அரிசிக்கான முழுச் செலவையும் தமிழ்நாடு அரசே ஏற்கும் என்பதோடு இலங்கை அகதிகளின் முகாம்களில் குடிநீர் வசதி உள்ளிட்டவற்றை ஏற்படுத்த ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இலங்கை தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவது, சொந்த நாட்டிற்கு செல்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் என உள்ளடக்கிய குழு அமைக்கப்படும்.
இந்நிலையில் இலங்கை தமிழ் அகதிகளின் குடும்பத்தினருக்கு விலையில்லா எரிவாயு அடுப்பு மற்றும் இணைப்பு வழங்கப்படும் என்றும் முதல்வர் முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.