அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி 2022ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்படுவதால் 16லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். கடும் நெருக்கடியான சூழல் இருப்பினும் அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
சத்துணவு சமையல் ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 லிருந்து 60 ஆக உயர்த்தப்படும்.அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகமாக இருப்பதால் மாணவர்கள்-ஆசிரியர்கள் விகிதாச்சாரம் இணையாக இருப்பதற்காக ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.
அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட காலம், பணி நீக்க காலம் வேலைநாட்களாக கருதப்படும் என அறிவித்துள்ளார். பட்ஜெட்டில் ஏப்ரல் முதல் அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்படும் என கூறப்பட்ட நிலையில் ஜனவரியிலே வழங்க விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. -சா.கற்பகவிக்னேஷ்வரன்