சென்னை:-
தமிழகத்தில் நில அளவீட்டு கட்டணத்தை 40 மடங்கு உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
நில அளவை மற்றும் நிலவரித் திட்டம் தொடர்பான அரசாணையை தமிழக அரசின் வருவாய்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, நன்செய் நிலத்தின் எல்லை நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் 50 ரூபாயில் இருந்து 2000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழக வருவாய்த் துறைச் செயலர் அதுல்ய மிஸ்ரா பிறப்பித்துள்ள உத்தரவில்:-
கிராம, வட்ட, மாவட்ட வரைபடங்கள் வழங்குவதற்கும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. புல அளவீட்டு புத்தகம் பிரதி (A4) 20 ரூபாயிலிருந்து 50 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புல அளவீட்டு புத்தகம் பிரதி (A3)100 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
புல எல்லைகளை சுட்டிக்காட்டும் கட்டணம் 20 ரூபாயிலிருந்து 200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்லது. கோணமானி மூலம் பக்க எல்லைகளை சுட்டிக்காட்ட 30 ரூபாயிலிருந்து 300 ரூபாய் கட்டண உயர்வு செய்யப்பட்டுள்ளது. பராமரிப்பு நில அளவரின் முடிவுக்கு எதிரான மேல்முறையீட்டிற்கு கட்டணம் 50 ரூபாயிலிருந்து 400 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. புல எல்லைகளை நிர்ணயித்து சுட்டிக்காட்ட புன்செய் நிலத்திற்கு 30 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாகவும் நன்செய் நிலத்திற்கு 50 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
மேல் முறையீட்டின் பேரில் மறு அளவீட்டு புன்செய் நிலத்திற்கு 60 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாகவும், நன்செய் நிலத்திற்கு 60 ரூபாயில் இருந்து 4,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மாவட்ட வரைபடத்திற்கான கட்டணம் 189 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மாவட்டத்திற்கான எல்லைக்கோடு வரைபட கட்டணம் 51 லிருந்து 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. வட்ட வரைபடத்திற்கான (வண்ணம்) கட்டணம் 357 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
நில அளவை தொடர்பாக அமைக்கப்பட்ட குழு அளித்த பரிந்துரையை ஏற்று பத்து மடங்கு வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.