சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் ஆர்என் ரவி உரையுடன் தொடங்கியது.
இந்த உரையில் ஆளுநர் கூறியதாவது: கல்வி நிறுவனங்கள் அருகே போதைப்பொருள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் இரு மொழி கொள்கை தொடர்வதில் அரசு உறுதியாக உள்ளது. எங்கும் தமிழ், எதிலும் தமிழ் திட்டத்தின் கீழ் அனைத்திலும் தமிழ் மொழியின் பயன்பாடு ஊக்குவிக்கப்படும். தமிழ் ஆட்சி மொழிச்சட்டம் 1956 புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்படும்.
‘இல்லம் தேடி கல்வித் திட்டம்’ மூலம் தரமான கல்வியை எல்லா குழந்தைகளுக்கும் தர தமிழக அரசு முனைந்திருக்கிறது. ஆசிரியர்கள் அனைவருக்கும் புத்தாக்க பயிற்சி அளிக்கப்படும்.
தமிழகம் முழு அரசு பள்ளிகளை நவீனப்படுத்தும் சிறப்பு திட்டம் அடுத்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும். 24344 ஆரம்ப பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். உயர்கல்வியில் தரமான பாடத்திட்டத்தை சேர்த்து மாணவர்களின் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் பாடத்திட்டத்தை மாற்றியமைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கப்படும்.
தமிழகத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமை வழக்குகளில் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படும்
500 கோடி ரூபாயில் சிங்கார சென்னை திட்டம் செயல்படுத்தப்படும். 10 ஆண்டுகளில் தமிழகம் குடிசை இல்லாத மாநிலமாக மாற்றப்படும். தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில அரசின் பாடலாக அறிவித்து அரசு நிகழ்ச்சிகள், கல்வி நிலையங்களில் பாடப்படுகிறது; தனியார் நிகழ்ச்சிகளிலும் பாடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
150 ஏக்கர் பரப்பளவில் ஒரகடத்தில் மருத்துவ பூங்காவையும், தூத்துக்குடியில் 1,100 ஏக்கரில் பர்னிச்சர் பூங்காவை முதல்வர் துவங்கி வைப்பார். இதன் மூலம் 3 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்.
இந்தியா முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு நிலவுகிறது.தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசின் இலவச பஸ்களில் கடந்த 4 மாதங்களில் 61% அளவிற்கு மகளிர் பயணம் செய்துள்ளனர் என பேசிய ஆளுநர் ஆர்.என் ரவி, தனது உரையை ‘நன்றி’ ‘வணக்கம்’ ‘ஜெய்ஹிந்த்’ எனக்கூறி முடித்துக்கொண்டார்.