தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 7ம் தேதி முதல் இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் மற்றும் இதர நாட்களில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைமுறையில் இருந்து வருகிறது.
இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகளை வலுப்படுத்த வேண்டிய அவசியம் குறித்து மருத்துவ வல்லுநர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறைஅமைச்சர் மா. சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, உலக சுகாதார நிறுவனத்தின் முதுநிலை ஆராய்ச்சியாளர் மருத்துவர் சௌமியா சாமிநாதன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றைக் கட்டுப்படுத்துவது குறித்தும், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது. ஆலோசனை கூட்டத்தில் எடுகப்பட்ட முடிவின் படி, பொது மக்கள் நலன் கருதியும் எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பொதுமக்கள் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் கூட்டம் கூடுவதால் நோய்த் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு பின்வரும் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் 31-1-2022 வரை நடைமுறைப்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
கூடுதல் கட்டுப்பாடுகள் என்னென்ன?
- 14-01-2022 முதல் 18-01-2022 வரை அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை.
- 16-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும்.
- பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பொதுமக்கள் நலன் கருதி பொது பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் 75% பயணிகள் மட்டுமே அமர்ந்து பயணிக்க அனுமதி.
- தற்போது ஊரடங்கு காலங்களில் தடை செய்யப்பட்ட மற்றும் அனுமதிக்கப்பட்ட இதர செயல்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும்.