மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் பாலமுருகன் என்ற பார்வையாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி, இந்த ஆண்டு கொரோனா கட்டுபாடுகளுடன் நடைபெற்றது. இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டிகள் மாலை 5 மணியுடன் நிறைவடைந்தன. கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், காளைகளும், காளையர்களும் விறுவிறுப்பாக பங்கேற்றனர்.
அவனியாபுரத்தில் மாடு வெளியே வரும் இடத்தில் இருந்து ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசித்துக் கொண்டிருந்த பாலமுருகன் என்ற 18 வயது பார்வையாளர் மாடு முட்டியதால் உயிரிழந்தார். காளை மாடு முட்டியதில் இடது பக்க மார்பில் படுகாயமடைந்த பாலமுருகன், உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு ஆம்புலன்சு மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். இருப்பினும், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த போட்டியில் 59 பேர் காயமடைந்துள்ளனர். மாடுபிடி வீரர்கள் 26 பேரும், மாட்டின் உரிமையாளர்கள் 22 பேரும், பார்வையாளர்கள் 11 பேரும் பாதிக்கப்பட்டனர். மேல்சிகிச்சைக்காக 17 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.