சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 22 ஆண்டுகள் விளையாடிய முதல் மகளிர் கிரிக்கெட் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ்.
இங்கிலாந்து அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் களம் கண்டதன் மூலம் இந்த சாதனையை படைத்துள்ளார். இதன் மூலம், சச்சின் டெண்டுல்கரின் தகர்க்க முடியாத சாதனையை மிதாலி ராஜ் சமன் செய்துள்ளார்.
கிரிக்கெட் உலகின் கடவுள் என்று வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கர், பல வரலாற்றுச் சாதனைகளைப் படைத்திருக்கிறார். இவற்றில் சில சாதனைகள் முறியடிக்கப்பட்டாலும், இன்றளவும் தகர்க்க முடியாத பல சாதனைகள் வரிசை கட்டி நிற்கிறது.
ஒருநாள் கிரிக்கெட்டில் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களை கடந்து விளையாடிய வீரர்கள் பட்டியலில் சச்சின் பெயர் மட்டுமே உள்ளது. சச்சின் மொத்தம் 22 ஆண்டுகள் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடினார்.
இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் இந்தியா, இங்கிலாந்து இடையிலான போட்டி மூலம், மிதாலி ராஜ் ஒருநாள் கிரிக்கெட்டில் 22 ஆண்டில் அடியெடுத்து வைத்து, சச்சின் சாதனையை சமன் செய்துள்ளார்.
கடந்த 1999ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் தேதி, சச்சினை போலவே தனது 16 வயதில் அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி மூலம் அறிமுக வீராங்கனையாக களம் இறங்கினார் மிதாலி ராஜ்.
தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்ற அவர் தற்போது, ஒருநாள் கிரிக்கெட்டில் 22ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். 38 வயதாகும் மிதாலி ராஜ் இதுவரை 214 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
மிதாலி ராஜ் 51.06 என்ற சராசரியுடன் 7098 ரன்கள் அடித்துள்ள இவரது அதிகபட்ச ஸ்கோர் 125 நாட் அவுட் ஆகும். அதேபோல, மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 6000 ரன்களுக்கு மேல் அடித்துள்ள ஒரே வீராங்கனை இவர்தான்.
டி20 கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடி 89 போட்டிகளில் 2364 ரன்கள் சேர்த்துள்ளார். அதிகபட்சம் 94 ரன்கள் நாட் அவுட். இவர் அறிமுக ஒருநாள் போட்டியிலேயே சதம் (114*) அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.