மழை நிவாரணம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ரங்கசாமி சட்டசபையில் இன்று தொடங்கி வைத்தார்.
புதுச்சேரியில் கடந்த மாதம் பெய்த வரலாறு காணாத மழையால் மாநிலமே வெள்ளக்காடானது. வீடுகள், சாலைகள், விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின. இதையடுத்து கடந்த மாதம் 16-ம் தேதி சிவப்பு ரேஷன் கார்டுக்கு ரூ.5 ஆயிரம், மழையால் பாதித்த நெற்பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்திருந்தார்.
அறிவிப்பிற்கு பின்னர் தொடர்ந்து கனமழை பெய்ததால் ஒட்டுமொத்த மக்களுமே கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாகினர். எனவே அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் மழை நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கைகள் குவிந்தன. இதையடுத்து கடந்த 22-ம் தேதி அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரூ.5 ஆயிரம் மழை நிவாரணமாக வழங்கப்படும் என ரங்கசாமி அறிவித்தார்.
இந்த அறிவிப்பின் படி ஒரு லட்சத்து 85 ஆயிரம் சிவப்பு நிற ரேஷன் கார்டுக்கும், ஒரு லட்சத்து 42 ஆயிரம் மஞ்சள் ரேஷன் கார்டுக்கும் என ஒட்டுமொத்தமாக 3 லட்சத்து 27 ஆயிரம் ரேஷன் கார்டுகளுக்கு ரூ.156 கோடி மழை நிவாரணமாக வங்கியில் செலுத்தப்படுகிறது. மழை நிவாரணம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ரங்கசாமி சட்டசபையில் இன்று தொடங்கி வைத்தார்.