‘ ஒத்த செருப்பு’ படத்தை தொடர்ந்து தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பாலும், வித்தியாசமான கதையை இயக்கியதாலும் மக்களிடம் பிரபலமானவர் நடிகர் பார்த்திபன்.
இவர் சமீபத்தில் இயக்கி நடித்த’ ஒத்த செருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. படம் முழுவதும் இவரின் கதாபாத்திரம் மட்டுமே இடம்பெற்றது. இந்த படத்தை ரசிகர்கள் பெரிதும் பாராட்டினர்.
இந்த நிலையில் நடிகர் பார்த்திபன் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த படத்திற்கு “இரவில் நிழல்” என பெயரிட்டுள்ளார். இந்த படத்தின் டைட்டிலை வெளியிட்ட இயக்குனர் இமயம் பாரதிராஜா, “உலக விருதுகள் பல வென்று தமிழுக்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்ப்பாய்” என பாராட்டியுள்ளார்.
இந்தப்படத்தில் பார்த்திபன் ஒரு புதிய முயற்சியை கையாள உள்ளார். அதன்படி இப்படத்தில் இடம்பெறும் காட்சிகள் அனைத்தையும் ஒரே ஷாட்டில் எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இதனால் ஒத்த செருப்பு படத்தை போல இந்த படமும் ரசிகர்களை நிச்சயம் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.