கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 20 கே.ஜி.எப் திரைப்படம் தமிழில் வெளியானது. அதன் பின் இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. அதனைத் தொடர்ந்து கே.ஜி.எஃப் 2 படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது, மேலும் இதில் சஞ்சய் தத், பிரவீனா டாண்டன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
கொரோனா நெருக்கடிநிலை காரணமாக இப்படத்தின் பணிகளைத் திட்டமிட்டபடி நடத்துவதில் சிக்கல் எழுந்தது. படப்பிடிப்பு பணிகளைத் தொடங்குவதற்கு கிடைத்த அனுமதியையடுத்து, படத்தின் பணிகள் மீண்டும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.கே.ஜி.எப் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் முன்னரே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.
இந்நிலையில், படத்தின் டீசர் குறித்த அப்டேட்டை கடந்த மாதம் படக்குழு வெளியிட்டது. அதன்படி, படத்தின் டீசரானது ஜனவரி 8 தேதி அன்று வெளியிடுவதாக அறிவித்திருந்தது. ஆனால் அதற்கு ஒரு நாள் முன்பே திடீரென டீசரின் ஒரு பகுதி ட்விட்டரில் கசிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழு அறிவித்ததற்கு முன்பாகவே அதிகாரப்பூர்வமாக டீசரை வெளியிட்டது. அதனையடுத்து கே.ஜி.எஃப் 2 திரைப்படம் வரும் ஜூலை 16 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் நடிகர் யாஷ் ரசிகர்கள் கே.ஜி.எஃப் 2 திரைப்படம் வெளியாகும் ஜூலை 16 அன்று தேசிய விடுமுறை அளிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். இதனையடுத்து இந்த கடிதம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.