மதுரை:-
தமிழ்த் திரைப்பட நடிகையும் நாட்டுபுற பாடகியுமான பரவை முனியம்மா (76) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
சில மாதங்களாக சிறுநீரக கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார்.
தனது நாட்டுப்புறப் பாடல்களாலும் தனது கிராமிய பேச்சாலும் ரசிகர்களை கவர்ந்தவர் பரவை முனியம்மா. இவர் விக்ரம் நடித்த ‘தூள்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்.
குறிப்பாக அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘சிங்கம் போல’ என்ற பாடலின் மூலம் பிரபலமானவர். அதனைத் தொடர்ந்து சுமார் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘மான் கராத்தே’ ஆகும்.
நடிகையாக அறிமுகமாகும் முன்பு நாட்டுப்புற பாடல்கள் மூலம் இவர் பிரபலம். தமிழகம் தொடங்கி வெளிநாடுகளில் வரை இவருடைய நாட்டுப்புற மேடை கச்சேரிகள் மிகவும் பிரபலம். தமிழக அரசு இவருக்கு கலைமாமணி பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு பரவை முனியம்மா காலமாகிவிட்டார் என்று செய்திகள் பரவின. அவை வெறும் வதந்தி தான். அவர் சிகிச்சைக்குப் பணமின்றி இருப்பதாகச் செய்திகள் வெளியாகின. இதனைதொடர்ந்து விஷால், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் பண உதவி செய்தார்கள். இதனைத் தொடர்ந்து உடல்நலம் தேறி பேட்டிகள் கொடுத்தார் என்பது குறிப்பிடதக்கது.