பெங்களூருவைச் சேர்ந்த ஐடி ஊழியர் ஒருவர் OCD – Obsessive Compulsive Disorder பிரச்சனை காரணமாக ஒரு நாளைக்கு 10 மணி நேரம் குளிக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளார். இந்தப் பிரச்சனையால் பாதிக்கப்படுபவர்கள் திரும்பத் திரும்ப ஒரே செயலை யோசித்துக் கொண்டும், செய்து கொண்டும் இருப்பார்கள்.
அதில் சிலர் நிலை மிகவும் மோசமாகி தற்கொலை வரை செல்லும் அபாயம் கூட உள்ளதாகக் கூறப்படுகிறது. OCD பிரச்சனையால் பாதிக்கப்பட்ட அந்த ஐடி ஊழியர் தினமும் அதிகாலை 3 மணிக்கு எழுந்து குளிக்கச் சென்று 6 மணி வரை குளித்துவிட்டு பின்னரே அலுவலகத்திற்கு கிளம்பிச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார்.
மாலை அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியதும் மீண்டும் குறைந்தது 4 மணி நேரமாவது குளிக்கும் அவர் அதற்காக ஒரு நாளைக்கு 3 சோப்புகள் மற்றும் ஒரு டஜன் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தி வந்துள்ளார். பிளாஸ்டிக் பைகளை கிளவுஸ் போல உபயோகித்து வந்துள்ளார். மேலும் அவர் சருமப் பிரச்சனைக்கும் ஆளாகி இருந்துள்ளார்.
இந்த பிரச்சனை குறித்து அறிந்த அவருடைய மனைவி அவரை அதிலிருந்து மீட்க முயற்சித்துள்ளார். அது முடியாமல் போகவே கடைசியாக கணவரை விவாகரத்து செய்துவிட்டுச் சென்றுள்ளார்.
இதனால் மனமுடைந்த ஐடி ஊழியரின் தாய் அவரை மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவருடைய பிரச்சனையைக் கேட்ட மருத்துவர்கள், அதன் தீவிரத்தை உணர்ந்து உடனடியாக அவருக்கான சிகிச்சையைத் தொடங்கியுள்ளனர்.