கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை இதுவரை 400க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக கேரளா சுற்றுலாத்துறைக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சட்டசபையில், அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் நேற்று 3 – வது நபர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளதாக உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைமைச் செயலாளர் டாம் ஜோஸ் இதனை மாநில பேரிடர் என்று அறிவித்தார்.
கேரளாவில் உள்ள மூன்று கொரோனா வைரஸ் நோயாளிகளும் கடந்த மாதம் சீனாவின் வுகான் நகரிலிருந்து திரும்பிய மாணவர்கள் ஆவார்கள். இவர்கள் வடக்கு கேரளாவின் காசர்கோடு, மத்திய கேரளாவின் திருச்சூர் மற்றும் தெற்கு கேரளாவின் ஆலப்புழா ஆகிய மூன்று வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைரஸ் பரவுவதை தடுப்பது குறித்து ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின் பேரில் உயர் மட்ட அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் 28 தனி வார்டுகள் தயார் செய்யப்பட்டுள்ளன. பணிகளுக்காக 40,000 க்கும் மேற்பட்ட சுகாதார அதிகாரிகள், அரசு ஊழியர்கள், கீழ் நிலை ஊழியர்கள் தயாராக உள்ளனர்.
வெளிநாட்டினர் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலாபயணிகளும் கேரளா செல்வதை தவிர்த்து வருகிறார்கள்.
இதன் காரணமாக கேரள சுற்றுலாதலங்களில் உள்ள ஓட்டல்கள் அனைத்தும் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி கிடக்கின்றன.