இந்தியாவுடன் மறைமுக போரில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தானை வீழ்த்தி மண்டியிட வைக்க நமது படைகளுக்கு 10-12 நாட்களுக்கு மேல் ஆகாது என்று பிரதமர் மோடி கூறினார்.
டில்லியில் பிரதமரின் தேசிய மாணவர் படை (National Cadet Corps) வருடாந்திர பேரணி நேற்று நடைபெற்றது. அதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
இந்தியாவிடம் மூன்று போர்களில் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது. இதனால் இந்தியாவுடன் மறைமுக போரில் பல தசாப்தங்களாக ஈடுபட்டு வருகிறது. முந்தைய அரசுகள், இதை வெறும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையாகவே பார்த்தன.
ஏதேனும் நடவடிக்கை எடுக்க அனுமதி தருமாறு நமது ராணுவம் கேட்டால் கூட அவர்கள் அனுமதி அளிக்க மாட்டார்கள். ஆனால், பாகிஸ்தானை வீழ்த்த இந்திய படைகளுக்கு 10-12 நாட்களுக்கு மேல் தேவைப்படாது.
முந்தைய அரசுகள் போலன்றி LoC ஐ தாண்டி தீவிரவாத முகாம்கள் மீது 2016 செப். 29 ல் Surgical strike தாக்குதல் நடத்தியுள்ளோம்.
கடந்த வருடம் பிப்ரவரி 26 பாகிஸ்தானின் பாலகோடில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத பயிற்சி முகாம்கள் மீது நமது விமான படையின் மிராஜ் ஃபைட்டர் விமானங்கள் குண்டு வீசி அழித்தது.
நாம் சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்தே காஷ்மீரில் பிரச்சினை இருந்து வருகிறது. சில குடும்பங்களும், அரசியல் கட்சிகளும் தங்கள் சுய லாபத்துக்காக பிரச்சினைகளை உயிர்ப்புடன் வைத்திருந்தன. அதனால் தான் அங்கு பயங்கரவாதம் செழித்து வளர்ந்தது.
பல்லாண்டுகளாக இந்த நாட்டை பிடித்துள்ள பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண மத்திய அரசு முயன்று வருகிறது. தற்போது, காஷ்மீர் மட்டுமின்றி, நாட்டின் பிற பகுதிகளும் அமைதியாக இருக்கின்றன.
வடகிழக்கு மாநில மக்களின் உணர்வுகள் இத்தனை ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு வந்தன. அவர்களின் உணர்வுகளை பூர்த்தி செய்து வருகிறோம்.
நாம் சுதந்திரம் அடைந்தபோது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் உள்ள சிறுபான்மையினர் தேவைப்பட்டால் இந்தியாவுக்கு வரலாம் என்று இந்தியா உறுதி அளித்தது. இது மகாத்மா காந்தியின் விருப்பம்.
இந்த நாடுகளில் மதம் காரணமாக துன்புறுத்தப்படுபவர்களுக்கு உள்ளானவர்களுக்கு அடைக்கலம் அளிப்பது நமது கடமை. அவர்கள் அந்நாடுகளில் சரித்திர அநீதியை சந்தித்துள்ளனர்.
அதை சரி செய்யவும், வாக்குறுதியை நிறைவேற்றவும் குடியுரிமை திருத்த சட்டம் (CAA) கொண்டுவரப்பட்டுள்ளது. 1950-ம் ஆண்டு இந்திய பிரதமர் நேருவுக்கும், பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலிகானுக்கும் இடையே இதுதொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தானது.
எனவே இது இந்தியாவின் நீண்டநாள் வாக்குறுதி. அதை நாங்கள் நிறைவேற்றுகிறோம்.ஆனால் ஓட்டு வங்கிக்கு போட்டி போடும் எதிர்க்கட்சிகள் இதை எதிர்க்கின்றன.
அவர்கள் யாருக்காக பாடுபடுகிறார்கள்? பாகிஸ்தானில் உள்ள அந்த மக்கள் சந்திக்கும் கொடுமைகள் இவர்களது கண்ணுக்கு தெரியவில்லையா? பாதிக்கப்பட்டவர்களில் பட்டியல் இனத்தவரும் உள்ளனர் என்றார்.
இறுதியாக தற்போது 14 லட்கமாக உள்ள தேசிய மாணவர் படையின் எண்ணிக்கையை வரும் 2023ல் 15 லட்சமாக உயர்த்துவோம் என்று பேசினார்.